பெரம்பலூர்,செப்.02-பாலையூர் அருள்சக்தி மாரியம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள பாலையூர் உள்ள மகா சக்தி விநாயகர் அருள் சக்தி மாரியம்மன் கோவிலில் குடமுழுக்கு நீராட்டு விழா நடந்தது. 12 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் திருப்பணிகள் செய்து அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடத்த கிராம பொதுமக்கள் முடிவு செய்தனர். பின்னர் திருப்பணிகள் செய்து முடிந்த நிலையில் கும்பாபிஷேக விழா கொடியேற்றத்துடன் தொடங்கி கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, ரக்ஷாபந்தனம், முதற்கால யாக பூஜை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், கோ பூஜை, இரண்டாம் கால யாக பூஜை ஆகிய பூஜைகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக புனிதநீர் ஊற்றும் நிகழ்ச்சி விநாயகர், மாரியம்மன் கோவிலில் நடந்தது. இதில் பாலையூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். தொடர்ந்து மஹா அபிஷேகமும், மாலையில் மாரியம்மனுக்கு பொங்கல், மாவிளக்கு பூஜையும், இரவு சுவாமி திருவீதி உலா கரகாட்டம் மற்றும் வாண வேடிக்கை நடந்தது.