பதிவு செய்த நாள்
03
செப்
2014
11:09
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த, நரப்பாக்கம் ஏரிக்கரையில் இருக்கும் வீரந்தியம்மன் கோவிலில், அப்பகுதிவாசிகள், மழை வேண்டி பூஜை செய்தனர். காஞ்சிபுரம் அடுத்துள்ளது நரப்பாக்கம் கிராமம். இப்பகுதியில், கடந்த நான்கு ஆண்டுகளாக மழை சரிவர பெய்ய வில்லை. இதனால், நரப்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லை. இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளும், பகுதிவாசிகளும், தண்ணீருக்காக சிரமப்பட்டு வந்தனர். விவசாயத்தை நம்பி இருக்கும் விவசாயிகள், பெரும் கவலையில் ஆழ்ந்தனர்.இந்த நிலையில், கிராமத்தின் ஏரிக்கரையில் உள்ள கிராம தேவதை வீரந்தியம்மனுக்கு, மழை வேண்டி பூஜை செய்ய முடிவு செய்தனர். அதன்படி, இந்த ஏரியை நம்பி விவசாயம் செய்யும் நரப்பாக்கம், மேட்டுப்பாளையம், ஆளவந்தான்மேடு ஆகிய கிராமவாசிகள் சேர்ந்து, கிராம தேவதையான வீரந்தியம்மனுக்கு 48 நாள் பூஜை செய்தனர்.இதன் இறுதி நாளான நேற்று காலை, இப்பகுதிவாசிகள் சேர்ந்து பொங்கலிட்டு, அம்மனுக்கு படைத்தனர். பூஜையில் கலந்து கொண்ட பெண்களில் சிலருக்கு அருள் வந்து, வாக்கு கூறினர்.மழை பெய்யும் என்ற நம்பிக்கையில், கிராமவாசிகள், இந்த பூஜையில் கலந்து கொண்டனர்.