பதிவு செய்த நாள்
03
செப்
2014
11:09
தமிழக அரசின் தடை ஆணையை மீறி, சென்னை, புரசைவாக்கம் கங்காதரேஸ்வரர் கோவில் நிலம், கிறிஸ்தவ சமய நிறுவனத்தின் பயன்பாட்டுக்கு கொடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில், கோவில்களுக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட சொத்துகள் ஏராளமாக உள்ளன. இந்த சொத்துகளை பாதுகாத்து, பராமரிக்க வேண்டிய அறநிலையத்துறை அதிகாரிகள், அலட்சியப் போக்குடன் செயல்படுவதாக புகார் கூறப்படுகிறது.இருக்கும் சொத்துகளை நிர்வகிப்பதிலும் பல்வேறு விதிமீறல்கள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
கிறிஸ்தவ நிறுவனத்துக்கு: சென்னை, புரசைவாக்கம் கங்காதரேஸ்வரர் கோவிலுக்கு, குத்தகை மற்றும் வாடகை பாக்கி வைத்துள்ளவர்கள் பெயர்களை, அறநிலையத் துறை, அண்மையில் வெளியிட்டது. இந்த பட்டியலில், ’தி சால்வேஷன் ஆர்மி’ என்ற கிறிஸ்தவ சமய நிறுவனம் பெயரில், வாடகை கட்டணமாக, 5.30 லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளதாக, அறநிலையத் துறை அறிவித்தது.இது குறித்து விசாரித்ததில், புரசைவாக்கம் கங்காதரேஸ்வரர் கோவில் தெருவில், கோவிலுக்கு சொந்தமான மனையில், ’தி சால்வேஷன் ஆர்மி’ நிறுவனத்தின் சென்னை கோட்ட அலுவலகமும், பிரார்த்தனை வளாகமும் அமைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
விதிமீறல்: இந்த இடத்துக்கு அந்நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக, வாடகை செலுத்தாத வகையில், 5.30 லட்சம் ரூபாய் நிலுவையில் இருக்கிறது.தமிழக அரசின் உள்துறை, 1958 பிப்ரவரி, 18ம் தேதி பிறப்பித்த அரசாணையின்படி, கோவில் நிலங்களையும், கட்டடங்களையும் இந்து அல்லாத பிற மதத்தினருக்கோ, அவர்களின் பயன்பாட்டுக்கோ அளிக்கக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில்களுக்கு அருகில் உள்ள அதற்கு சொந்தமான நிலங்கள் மற்றும் கட்டடங்களில், பிற மத நிறுவனங்கள் செயல்பட்டால், விழா காலங்களில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க, பிற மத நிறுவனங்களுக்கு குத்தகை அளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அரசு தெளிவாக உத்தரவு பிறப்பித்துள்ளபோது, அதற்கு மாறாக, கோவில் நிலம், கிறிஸ்தவ சமய நிறுவனத்துக்கு சென்றது எப்படி என்பது, புதிராக உள்ளது.
பக்தர்கள் அதிர்ச்சி: இது குறித்து, ஆலய வழிபடுவோர் சங்கத்தின் செயல் தலைவர் டி.ஆர்.ரமேஷ் கூறியதாவது:கோவில் நிலங்களை பிற சமய நிறுவனங்களுக்கு குத்தகை மற்றும் வாடகைக்கு விடுவதை தடை செய்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதை அப்பட்டமாக மீறும் வகையில், அறநிலையத்துறை செயல்பட்டுள்ளதற்கு, இதுவே சிறந்த உதாரணம்.வேறு சமய நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டது தெரிந்தும் அதை மீட்க, அறநிலையத்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
நடவடிக்கை: இது குறித்து அறநிலையத்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ’அரசாணை தெளிவாக உள்ள நிலையில், பிற சமய நிறுவனத்துக்கு நேரடியாக குத்தகைக்கு வழங்கியிருக்க வாய்ப்பில்லை. குத்தகைக்கு பெற்ற இந்து சமயத்தை சேர்ந்தவர் யாராவது, இந்த நிறுவனத்துக்கு வாடகைக்கு விட்டிருக்கலாம். இதில், உண்மை நிலவரம் குறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.