பதிவு செய்த நாள்
15
செப்
2014
11:09
பொதட்டூர்பேட்டை : ஒரு வார காலமாக நடந்த ஜாத்திரை திருவிழா, கோலாகலமாக நிறைவடைந்தது. நிறைவு நாளில், ரத உற்சவத்துடன், பொன்னியம்மன் ஊர்வலமாக எழுந்தருளினார். ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம், வங்கனுார், பொதட்டூர்பேட்டை, சொரக்காய்பேட்டை, அத்திமாஞ்சேரிபேட்டை உள்ளிட்ட ஊர்களில், கடந்த 7ம் தேதி, எல்லை பொங்கல் பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, பூங்கரகம் கிராம எல்லைகளுக்கு தாரை, தப்பட்டையுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ஆர்.கே.பேட்டையில், செவ்வாய்கிழமை இரவு; அம்மையார்குப்பம், பொதட்டூர்பேட்டையில், புதன்கிழமை பகல்; சொரக்காய்பேட்டையில், வியாழக்கிழமை பகல், 12:00 மணிக்கு, அம்மனுக்கு கும்பம் படைக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் மாவிளக்கு ஏந்தியபடி சென்றனர். பொதட்டூர்பேட்டையில் வெள்ளிக்கிழமை மாலை, பாரம்பரியமான ரத ஊர்வலம் நடந்தது. இதில், பக்தர்கள் அம்மன் வேடம் தரித்து, தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர். அதை தொடர்ந்து, பொன்னியம்மன் ஊர்வலமாக எழுந்தருளினார்.