மயிலம்: மயிலம் முருகன் கோவில் ஆவணி மாத கிருத்திகை விழாவை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தது. மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் கோவிலில் நேற்று கிருத்திகையை முன்னிட்டு காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. காலை 11 மணிக்கு கோவில் வளா கத்திலுள்ள பாலசித்தர், வினாயகர் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமிக்கு நறுமணப் பொருட்களினால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பகல் 12 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு மகாதீபாராதனை நடந்தது. மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிற்பகல் ஒரு மணிக்கு கோவில் மண்டபத்தில் அன்னதானம் வழங்கினார்கள். ஏராளமான பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்தி கடனைச் செலுத்தினார்கள். இரவு 9 மணிக்கு மலர்களினால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கிரிவலம் நடந்தது. விழா ஏற்பாடுகளை மயிலம் ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.