பதிவு செய்த நாள்
15
செப்
2014
11:09
மதுராந்தகம்: மதுராந்தகம் தேரடி தெருவில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, அறநிலைய துறை கோவிலுக்கு சொந்தமான பெரிய தேர் மழையிலும், வெயிலிலும் காய்ந்து வருகிறது.
10 நாள் உற்சவம்: மதுராந்தகம் நகரில் புகழ்பெற்ற ஏரி காத்த ராமர் எனப்படும், கோதண்டராமர் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு சொந்தமாக பெரிய தேர் உள்ளது. பல லட்சம் மதிப்பில், பல்வேறு சிற்ப வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த பெரிய தேர், மதுராந்தகம் தேரடி வீதி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பத்து நாள் உற்சவத்தின்போது, இந்த தேர் வீதியுலா கொண்டு செல்லப்பட்டு, மீண்டும் அதே பகுதியில் வந்து நிலையடையும். அதன்பின் இந்த தேர் முழுவதும் மூடி பாதுகாக்கப்படும். இந்நிலையில் இந்தாண்டு, கடந்த ஜூலை மாதம் வழக்கம்போல் நடந்த 10 நாள் பிரம்மோற்சவத்தின்போது, இத்தேர் வீதியுலா சென்று, மீண்டும் நிலை வந்தடைந்தது. ஆனால், உற்சவ விழா முடிந்தும் தேர் முறையாக மூடப்பட்டு பாதுகாக்கப்படவில்லை.
பக்தர்கள் கவலை: இரண்டு மாதங்களுக்கு மேலாகியும், இதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபடாததால், வெயிலிலும், மழையிலும் தேர் காய்ந்து வீணாகி வருகிறது. இது பக்தர்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே வீணாகி வரும் தேரினை, முறையாக பாதுகாக்க அறநிலைய துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.