சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் திருப்பணிகள் துவங்கப்பட்டுள்ளதால் கிழக்கு கோபுர வாயில் அடைக்கப்பட்டு பக்தர்கள் மாற்று கோபுரம் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். பூலோக கைலாசம், சிதாகாசம், இதயக்கோவில் என பல்வேறு சிறப்புகள் பெற்ற பிரசித்திப்பெற்ற சி தம்பரம் நடராஜர் கோவில் கடந்த 1987ம் ஆண்டு அனைத்து சன்னதிகள், நான்கு கோபுரம் ஆகியவை ஒரே சமயத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின்னர் கிழக்கு மற்றும் மேற்கு கோபுரம் 2006ம் ஆண்டும், வடக்கு கோபுரம் 2007ம் ஆண்டும், தெற்கு கோபுரம் 2008ம் ஆண்டும் நடந்தது.
சிதம்பரம் சபாநாயகர் கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில் 27 ஆண்டுகளுக்கு பின்னர் நடராஜர் கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டு மகா கும்பா பிஷேகம் 1.5.2015ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் கடந்த இரு மாதங்களுக்கு முன் நடராஜர் சன்னதியில் மகா கும்பாபிஷேக திருப் பணிகள் துவங்குவதற்கு சுவாமி பாலாலயம் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனைத் தொடர்ந்து கோவில் திருப்பணிகள் கடந்த 12ம் தேதி துவங்கப் பட்டுள்ளது. திருப்பணிகள் கிழக்கு கோபுரத்தில் இருந்து துவங்கப்பட்டுள்ளது. அதனால் கோபுரம் சுற்றி சாரம் கட்டும் பணி துவங்கியது. அதனால் கிழக்கு கோபுரம் நுழைவாயில் கட்டைகளால் தடுப்பு சுவர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கிழக்கு கோபுரம் வழியாக உள்ளே செல்லமுடியாது. திருப்பணிகள் கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு கோபுரங்கள் மற்றும் சுவாமி சன்னதிகள் பொது தீட்சிதர்கள் சார்பில் பக்தர்கள் நன்கொடை மூலம் செய்யப்பட உள்ளது. தெற்கு கோபுரம் முத்தையா செட்டியார் குரூப் செய்ய திட்டமிட்டுள்ளனர்.