பதிவு செய்த நாள்
16
செப்
2014
11:09
காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள படவேட்டம்மன், சுந்தரம்மன் கோவில் ஆடித் திருவிழாவும், 18ம் ஆண்டு தீமிதி திருவிழாவும், நேற்று முன்தினம் நடந்தது. சின்ன காஞ்சிபுரத்தில் சி.எஸ்.செட்டித் தெருவில் படவேட்டம்மன், சுந்தரம்மன் கோவில் ஆடி திருவிழாவில், 18ம் ஆண்டு தீமிதி திருவிழா, கடந்த வியாழக்கிழமை துவங்கியது. அன்று காலை, அம்மனுக்கு அபிஷேகமும், மாலை சின்ன வேப்பங்குளத்தில் இருந்து ஜலம் திரட்டி அம்மனுக்கு அபிஷேகமும், அதைத் தொடர்ந்து, அம்மன் வீதியுலாவும் நடந்தன.
வெள்ளிக்கிழமை இரவு, அம்மன் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா, சனிக்கிழமை அம்மன் தாலாட்டு நடந்தது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை, 11:00 மணிக்கு கூழ்வார்த்தல், இரவு 7:30 மணிய ளவில் வரசித்தி விநாயகர் கோவில் எதிரில், தீமிதி விழா நடந்தது. இதில் ஏராளமான பெண்கள், ஆண்கள் கலந்து கொண்டு அக்னி குண்டத்தில் இறங்கினர். இதைத் தொடர்ந்து, அன்று இரவு, 8:00 மணிக்கு, கும்பம் போடுதல், நள்ளிரவு, 12:00 மணியளவில், எல்லை கட்டுதல் நிகழ்ச்சி ஆகி யவை நடந்தன.