பதிவு செய்த நாள்
16
செப்
2014
11:09
காரைக்குடி: செட்டிநாட்டு பாரம்பரியத்துடன் காரைக்குடியில் உருவாக்கப்பட்ட, வெள்ளி கரகம், தாய்லாந்திலுள்ள பாங்காங் முத்துமாரியம்மன் கோயிலுக்கு செல்கிறது. பாங்காங்கில்,தமிழக வம்சாவளியினரால், கடந்த 150 ஆண்டுக்கு முன்பு தோற்றுவிக்கப்பட்ட முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. தற்போது, அந்த வம்சாவளியை சேர்ந்த சுரப்போங் என்பவர், கோயிலை நிர்வகித்து வருகிறார். தமிழக கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில், இந்த கோயில் அமைந்துள்ளது. தமிழர்களின் வருகையை விட, தாய்லாந்தில் வசிக்கும் சீனர்கள் அதிகம் பேர் இங்கு வந்து செல்கின்றனர்.ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறுகிறது. அதன்படி வரும் 24-ம் தேதி விழா தொடங்கி, அக்.3-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இறுதி நாளன்று, பக்தர்கள் காவடி எடுத்தல், வேல் எடுத்தல் நிகழ்ச்சியுடன், கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சியும் விசேஷமாக நடைபெறும். தமிழ் வழி மக்களும், சீனர்களும் விரதம் இருந்து காவடி, கரகம் எடுக்கின்றனர். விரதம் இருக்கும் நாட்களில், பால் அசைவம் என கூறி, அதை கூட அருந்துவதில்லை. அத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலுக்கு, செட்டிநாட்டு பாரம்பரியத்துடன் கூடிய கரகம் அமைத்து தர, சுரப்போங் முடிவெடுத்து, காரைக்குடியை சேர்ந்த எம்.எஸ்.பி.சேதுராமன் ஜூவல்லர்சை சேர்ந்த, சரவணன் என்பவரிடம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆர்டர் கொடுத்தார். 6.666 கிலோவில், ரூ.4.5 லட்சம் செலவில் இந்த கரகம் தற்போது செய்து முடிக்கப்பட்டுள்ளது.சரவணன் கூறும்போது: பாங்காங் முத்து மாரியம்மன் கோயில் செல்லும், செட்டிநாட்டு பாரம்பரியமுடைய கரகம், முற்றிலும் கைவேலைப்பாடாலானது. 6 பேர் சேர்ந்து இதை உருவாக்கியுள்ளனர். நான்கு அடுக்குகளை கொண்டது. கீழ் அடுக்கில் சமயபுரம் மாரியம்மன், விநாயகர் உருவம் அமர்ந்த நிலையில் இடம் பெற்றுள்ளது. 24 அடி உயரம். அடுக்குகளில் 74 ஓம்சக்தி டாலர் இடம்பெற்றுள்ளது. மேல் அடுக்கில் 8 சிறிய கும்பமும், பெரிய கும்பம் ஒன்றும் உள்ளது. கலசத்தில் இடம்பெறும் வடிவம் இதில் உருவாக்கப்பட்டுள்ளது, என்றார்.