திருவாடானை : திருவாடானை அருகே கண்மாய்க்குள் ஐம்பொன்னாலான அம்மன் சிலை, பீடங்கள் கண்டெடுக்கபட்டன. திருவாடானை அருகே தளிர்மருங்கூர் கண்மாய் மராமத்து பணி நடந்தது. நேற்று முன்தினம் மணல் அள்ளும் இயந்திரம் தோண்டியபோது, ஐம்பொன்னால் செய்யப்பட்ட அம்மன் சிலை, இரண்டு பீடங்கள், ஒரு தலையில்லாத சிலை இருந்தது. தொண்டி இன்ஸ்பெக்டர் துரைபாண்டியன், தனிப்பிரிவு எஸ்.ஐ., முருகானந்தம் சம்பவ இடத்திற்கு சென்றபோது, அங்கு தலையில்லாமல் இருந்த சிலையை காணவில்லை. பின்பு போலீசார் அவற்றை தேடும் பணியில் ஈடுபட்டனர். வயலில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்து. ஆய்வில் தலையில்லாமல் இருந்த அம்மன் சிலை உட்பட அனைத்து சிலைகளும் ஐம்பொன்னால் செய்யப்பட்டது என தெரியவந்தது. கிராம மக்கள் கூறுகையில்,“ மன்னர்கள் காலத்தில் சிலை திருட்டு அதிகமாக நடந்தபோது ஒரு மன்னருக்கு பயந்து சிலைகளை மறைக்க கண்மாய்க்குள் புதைத்திருக்கலாம்” என்றனர். அனைத்து சிலைகளும் திருவாடானை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் காமாட்சியிடம் ஒப்படைக்கபட்டது. அதிகாரிகள் தொல்பொருள் ஆய்வு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.