தெய்வீக மரமான அரசமரம், மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் அம்சமாக கருதப்படுகிறது. இதற்கு ‘அஸ்வத்த மரம்’என்றும் பெயருண்டு. இதற்கான புராணக்கதை ஒன்று கூறப்படுகிறது. எந்த தெய்வத்தைக் குறித்து ஹோமம் நடத்தினாலும், அதில் இடப்படும் ஹவிஸை(ஆகுதி) அந்த தெய்வத்திடம் சேர்ப்பவர் அக்னி. இந்த பணியையே தொடர்ந்து செய்ததால், அவருக்கு சலிப்பு ஏற்பட்டது. தேவலோகத்தை விட்டு கிளம்பிய அவர், குதிரை வடிவெடுத்து மறைந்து வாழ்ந்தார். தேவர்கள் அவரைத் தேடிய போது, அரசமரமாக மாறி நின்றார். குதிரையை சமஸ்கிருதத்தில் ‘அஸ்வம்’ என்பதால், அரசமரத்திற்கும் ‘அஸ்வத்த மரம்’ என்ற பெயர் வந்தது.அக்னியின் அம்சமான அரசமரத்தின் குச்சிகளேயாக குண்டங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதையே ‘போதி மரம்’ என்பர். புத்தருக்கு போதி மரத்தடியில் தான், ‘ஆசையே உலக துன்பங்களுக்கு காரணம்’ என்ற ஞானம் கிடைத்தது. போதி என்ற பாலி மொழி சொல்லுக்கு ‘அரசமரம்’ என்று அர்த்தம். அரசமரம் அதிகமான ஆக்சிஜனை வெளியிடும் என்பதால், விநாயகர், நாகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்தனர். திங்கட்கிழமையும், அமாவாசையும் இணைந்து வரும் நாளில் (பஞ்சாங்கம், காலண்டரில் அமாசோமவாரம் என குறிப்பிட்டுள்ள நாட்கள்) அரசமரத்தை வலம் வந்து வழிபட்டால், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.