சபரிமலை:புரட்டாசி மாத பூஜைக்காக நேற்று மாலை சபரிமலை நடை திறக்கப்பட்டது. இன்று முதல் செப்., 21-ம் தேதி வரை தினமும் இரவு 7 மணிக்கு படிபூஜை நடைபெறுகிறது. எல்லா தமிழ் மாதங்களிலும் முதல் ஐந்து நாட்கள் சபரிமலை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். புரட்டாசி மாத பூஜைக்காக நேற்று மாலை 5.30-க்கு மேல்சாந்தி நாராயணன்நம்பூதிரி நடை திறந்தார். வேறு எந்த விசேஷ பூஜைகளும் நடைபெறவில்லை. இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறந்ததும், நிர்மால்ய தரிசனத்துக்கு பின்னர் நெய்யபிஷேகம் தொடங்கும்.
செப்., 21-ம் தேதி வரை தினமும் காலையில் கணபதி ஹோமம், உஷபூஜை, மதியம் உச்சபூஜை, மாலையில் தீபாராதனை, இரவு அத்தாழ பூஜை நடக்கின்றன. இந்த பூஜைகளுடன் சகஸ்ரகலச பூஜை, களபபூஜை போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும். செப்., 21-ம் தேதி வரை இரவு 7 மணிக்கு படிபூஜை தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில் நடைபெறுகிறது. 21-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். ஐப்பசி மாத பூஜைக்காக அக்.,17-ம் தேதி மாலை 5.30-க்கு நடை திறக்கப்படும்.