பதிவு செய்த நாள்
17
செப்
2014
11:09
மேலுார்: ஏழை காத்த அம்மன் கோவிலில், புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு, அம்மனாக பாவித்து வழிபட, ஏழு பெண் குழந்தைகளை தேர்வு செய்யும் நுாதன நிகழ்ச்சி, நேற்று நடந்தது.மதுரை மாவட்டம், மேலுார் அருகே, வெள்ளலுார், உறங்கான்பட்டி, அம்பலக்காரன்பட்டி, குறிச்சிப்பட்டி, மலம்பட்டி ஆகிய கிராமங்கள் அடங்கிய பகுதி, வெள்ளலுார் நாடு எனப்படுகிறது. வெள்ளலுார், ஏழை காத்த அம்மன் கோவிலில், புரட்டாசி திருவிழாவுக்கான முன்நிகழ்வு துவங்கியது.
விழாவின் போது, அம்மானாக பாவித்து வழிபட, ஏழு பெண் குழந்தைகளை தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளுடன், பக்தர்கள், கோவில் முன் திரண்டனர். குழந்தைகளை, வேங்கைபுலி, சமட்டி, நைக்கான், சாயும்படை தாங்கி, வெக்காளி, சளிப்புழி, திருமான் என, வகைப்படுத்தி பிரித்து, ஏழு குழந்தைகளை, பூசாரி சின்ன தம்பி தேர்வு செய்து, கோவிலுக்குள் அழைத்து சென்றார்.இந்த சிறுமியர், 15 நாட்கள் கோவிலுக்குள் தங்குவர். வெள்ள லுார் நாடு என்று அழைக்கப்படும், 56 கிராமங்களையும் வலம் வந்து, கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, கோவிலிலே சமைத்து சாப்பிடுவர்.விழா துவங்கி விட்டதால், கிராமங்களைச் சேர்ந்தோர் வீட்டு உணவில், எண்ணெய் தாளிதம், மாமிசம், மாவு பிசைந்து சமைத்தல் ஆகியவற்றை தவிர்த்து, விரதத்தை துவங்கியுள்ளனர். விழா முடியும் வரை, இந்த பகுதி கிராமங்களில் மரம் வெட்டுவதும் நிறுத்தப்பட்டு உள்ளது.
வரும், 30ம் தேதி முக்கிய விழா நிகழ்ச்சி துவங்குகிறது. அம்மனாக பாவிக்க தேர்வு செய்யப்பட்டுள்ள சிறுமியர், அன்று முன்னே செல்ல, கிராமங்களைச் சேர்ந்தோர், அம்பலக்காரர்கள் தலைமையில், 8 கி.மீ., துாரத்திலுள்ள கோவில்பட்டி, ஏழை காத்த அம்மன் கோவிலுக்கு நடந்தே செல்வர். அவர்களைத் தொடர்ந்து, தென்னங்குருத்தால் செய்யப்பட்ட மதுக்கலயம் ஏந்தியபடி பெண்களும், நோயின்றி வாழ வேண்டி, உடலில் வைக்கோல் பிரி சுற்றியவர்களும், குழந்தை வரம் கேட்டு, பதுமைகளை சுமப்பவர்களும், கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்துவர். அக்., 1ம் தேதி, தேரோட்டம் நடக்கிறது.