பதிவு செய்த நாள்
17
செப்
2014
12:09
திருவண்ணாமலை அருணாச்சலேசுவரருக்கு சொந்தமாக, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்டளை நிலங்களில் முறையாக வாடகை செலுத்தாத, 162 வாடகைதாரர்கள் குறித்த பட்டியலை, கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேசுவரர் கோவிலுக்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பக்தர்கள், தானமாகவும், குறிப்பிட்ட கட்டளை பெயரிலும் கொடுத்த ஏராளமான நிலங்கள் உள்ளன.இந்த நிலங்களை, ஏராளமானோர் வாடகை செலுத்துவதாக ஒப்புக்கொண்டு, பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இவர்களில் பெரும்பாலானோர், இந்நிலங்களுக்கான வாடகையை கோவில் நிர்வாகத்துக்கு செலுத்துவதில்லை.
பாதிப்பு: இதனால், இந்நிலங்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தை கொண்டு மேற்கொள்ள வேண்டிய கட்டளை பணிகளை, முறையாக செய்ய தேவையான நிதி கிடைப்பதில், சிக்கல் ஏற்படுகிறது.எனவே, இதுபோன்ற கட்டளை நிலங்களில் நிலுவை தொகையை வசூலிக்க உரிய நடவடிக்கை எடுக்க, கோவில் நிர்வாகம் முடிவெடுத்து உள்ளது. இவ்வகையில், சென்னை, அடையாறு, ஊரூர் பகுதியில் நிலுவை செலுத்தாத வாடகைதாரர்கள் குறித்த பட்டியல், சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இப்போது, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள நிலங்களின் வாடகைதாரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
எச்சரிக்கை:இது குறித்து அருணாச்சலேசுவரர் கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:சென்னை, ராயப்பேட்டையில், பரணி அபிஷேக கட்டளையாக கொடுக்கப்பட்ட நிலம் உள்ளது. ராயப்பேட்டையில், அவ்வை சண்முகம் சாலை, வி.எம்.தெரு, சைவமுத்தையா தெரு ஆகிய பகுதிகளில் உள்ள இந்நிலங்களில், கடந்த பல ஆண்டுகளாக, 162 பேர் வாடகை செலுத்தாமல் இருந்து வருகின்றனர்.சட்ட விரோதமாக...இவர்களில் பெரும்பாலானோர், சட்ட விரோதமாக நிலங்களை உள்வாடகைக்கு விட்டு, லட்ச கணக்கில் சம்பாதித்து வருகின்றனர்.இவர்கள் அனைவரும், அடுத்த, ஏழு நாட்களுக்குள் வாடகை நிலுவையை செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில், வாடகை ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, இந்நிலங்களில் உள்ள கட்டடங்கள், ஆக்கிரமிப்புகளாக கருதப்பட்டு, சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.