பதிவு செய்த நாள்
17
செப்
2014
02:09
இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள, முக்கிய கோவில்களில் பசுக்கள் பராமரிக்கப்படும் விதம் குறித்து ஆய்வு செய்ய, 3 பேர் அடங்கிய குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழு, கோவில்களில் உள்ள பசு மடங்களை ஆய்வு செய்து, இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த அவல நிலை திருவண்ணாமலையில் மட்டுமல்லாமல் தமிழகமெங்கும் உள்ள பல கோவில்களிலும் தொடர்ந்து நிலவி வருவது ஏற்கனவே தெரியவந்துள்ளது. உதாரணத்திற்குச் சில: கடந்த, 2012-ம் ஆண்டு, நவம்பர் மாதம் தணிக்கை துறை ஆய்வில், திருச்செந்துார் கோவிலுக்குப் பக்தர்கள் வழங்கிய 5,000க்கும் மேற்பட்ட பசுக்கள் மாயமானது தெரியவந்தது. அவை என்னவாயின என்பது குறித்து, எவ்வித ஆவணங்களும் இல்லை. அறநிலையத் துறை அதிகாரிகளிடம் பதிலும் இல்லை.
ஸ்ரீரங்கம் கோவிலிலும் நுாற்றுக்கணக்கான பசுக்கள் மாயமாகியுள்ளன. பக்தர்களால் கொடுக்கப்படும் பசுக்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது, புதியதாக வந்த பசுக்களுக்கு உணவளிக்காமல் அவற்றை உடல்நலன் குன்றிப்போய் இறக்கச்செய்து, அவை நோய் வந்து இறந்ததாகக் கணக்குக் காட்டி, அவற்றை சுடுகாட்டிற்கு அனுப்பி, அங்கிருந்து வெட்டப்பட்டு ஸ்ரீரங்கம் முழுவதும் உள்ள பல இறைச்சி கடைகளுக்கு அனுப்பப்படுவதாக, 2007-ம் ஆண்டே பத்திரிகைகள் மூலம் தெரியவந்தது. பழனியிலிருந்து 40 கி.மீ., தொலைவில் உள்ள சீமனாம்பட்டி என்னும் ஊரில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமான கோசாலை உள்ளது. இது ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட கோசாலையாகும். அதாவது, பல்வேறு கோவில்களில் இடமில்லாத காரணத்தால், அங்குள்ள பசுக்கள் இங்கே கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்படும்.
கோசாலை இருக்கும், கோவிலுக்குச் சொந்தமான நிலம், 240 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கடந்த மார்ச் மாதம் அங்கே ஒன்பது மாடுகள் தான் இருந்தன. அவற்றில், மூன்று காளைகள், ஆறு பசு கன்றுகள். மூன்று காளை மாடுகளில் ஒரு காளை (காங்கேயம் காளை) மதுரையிலிருந்து கொண்டு வரப்பட்டது. இந்தக் கோசாலையைப் பராமரிக்க மட்டும், 20 பேர், நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த இடம் தண்ணீர் கஷ்டம் மிகுந்த வறட்சியான இடம். கோசாலையில் இந்தக் கட்டுரையாளர் நேரில் சென்று பார்த்தபோது இரண்டு தொட்டிகளில் மட்டும் தண்ணீர் இருந்தது. ஒரு இடத்தில் வைக்கோல் மட்டும் குவிக்கப்பட்டிருந்தது. மற்ற மாட்டு தீவனங்கள் எதுவும் காணோம். பணியில் இருந்தவரிடம் கேட்ட பொழுது, பஞ்சாமிர்தத்திற்குப் பயன்படுத்தப்படும் பழங்களின் தோல்களும், புற்கட்டுகளும் பழனியிலிருந்து கொண்டு வரப்படுவதாக தெரிவித்தார். ஆனால் அந்த மாதிரி எதுவும் வந்திருப்பதாகவும் தெரியவில்லை. பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலர் தானமாகப் பசுக்களை கொடுப்பது வழக்கம்.
அந்தப் பசுக்களைப் பெற்றுக்கொள்ளும் கோவில் நிர்வாகம், அவற்றைப் பராமரிக்க பக்தர்களிடம், ஒரு பசுவிற்கு 1000 ரூபாய் வீதம்,- கட்டணம் வசூலிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், நுாற்றுக்கணக்கான பசுக்கள் இறந்து விட்டன என்று, பழனி மலைக்கோவில் பாதுகாப்பு பேரவையினர் தெரிவித்தனர். மேலும், சில மாதங்களுக்கு முன்னால், 300 பசுக்களை, மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு அளித்ததாகவும் தெரியவந்தது. இது, விதிமுறைகளுக்குப் புறம்பானது; இவ்வாறு சுயஉதவிக் குழுக்களுக்குக் கொடுப்பதற்கு முன்னால், முறையான அரசாணை வெளியிடப்பட்டிருக்க வேண்டும். அறநிலைய துறையின் இதுபோன்ற நடவடிக்கைகளால், பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
தானமாக வரும் பசுக்களை சுய உதவிக் குழுவினரிடம் கொடுக்க முடிவு செய்த பின்பு, பக்தர்களிடம் ஏன் 1,000 ரூபாய், பராமரிப்பு கட்டணம் வாங்க வேண்டும்? அவ்வாறு வாங்கியுள்ள கட்டணப் பணத்திற்கு முறையான கணக்குகள் உண்டா? அந்தப் பணம் வேறு எதற்காகச் செலவிடப்பட்டுள்ளது? சுய உதவிக் குழுவினரிடம் கொடுத்த பிறகு, அவர்கள் அப்பசுக்களை என்ன செய்கின்றனர்? விற்கின்றனரா அல்லது பராமரிக்கின்றனரா? விற்கின்றனர் என்றால் ஏன் அவ்வாறு நடக்கிறது? அவ்வாறு விற்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறதா? அப்படி விற்பவர்களுக்கு ஏன் பசுக்களை வழங்க வேண்டும்?
பராமரிக்கின்றனர் என்றால் எப்படிப் பராமரிக்கின்றனர்? அவர்கள் பராமரிப்பதைக் கண்காணித்து முறைப்படுத்துவதற்கு என்ன விதமான வழிமுறைகள் உள்ளன? இந்த கேள்விகளுக்கு, அறநிலையத் துறை பதில் அளிக்குமா? லட்சக்கணக்கான கால்நடைகள் இறைச்சிக்காகவும் தோல் பயன்பாட்டிற்காகவும் கடத்தி அழிக்கப்படுவதை எப்படி அரசு கண்டுகொள்வதில்லையோ, அதேபோல் அறநிலையத் துறையின் அலட்சியத்தால் துன்புற்று அழியும் பசுக்களையும், அரசு கண்டுகொள்வதில்லை. முதல்வர், ஆவினங்களை காக்க வேண்டும் என்பதே, பக்தர்களின் அதிகபட்ச கோரிக்கை. (கட்டுரையாளர், கவுரவ ஆசிரியர், உதய் இந்தியா ஆங்கில வார இதழ்)