மீனாட்சி அம்மன் கோயில் பாதுகாப்பு: மீண்டும் ஆய்வு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18செப் 2014 11:09
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பாதுகாப்பு குறித்து நேற்று மத்திய பாதுகாப்பு நுண்ணறிவு அதிகாரி தலைமையில் ஆய்வு நடந்தது.இக்கோயிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால், மத்திய உளவுத்துறை அறிவுரைப்படி அவ்வப்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. போலீஸ் உதவிகமிஷனர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசாரை கோயிலுக்கென தனியாக நியமிக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இரு வாரங்களுக்கு முன், மத்திய பாதுகாப்பு படை கமாண்டன்ட் பிரேம்குமார் தலைமையிலான குழு, கோயில் பாதுகாப்பு குறித்து இருநாட்கள் ஆய்வு செய்து திருப்தி தெரிவித்தது. இந்நிலையில் நேற்று மத்திய பாதுகாப்பு நுண்ணறிவு பிரிவு துணை கமாண்டன்ட் சீனிவாசராகவன் மற்றும் தமிழ்நாடு போலீஸ் பாதுகாப்பு பிரிவு டி.எஸ்.பி., கேசவன் ஆகியோர் நேற்று காலை முதல் மதியம் வரை கோயிலில் ஆய்வு செய்தனர். பின், கோயில் நிர்வாக அதிகாரி நடராஜனிடம் ஆலோசனை செய்து, இன்னும் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆலோசித்தனர். இன்று கோயில் மேற்பகுதி உட்பட பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்கின்றனர்.