பதிவு செய்த நாள்
18
செப்
2014
01:09
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், சிற்பங்களை மறைத்து கட்டியுள்ள செங்கல் சுவர்களை அகற்றி, புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. திரு ச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில், 108 திவ்யதேசங்களில் முதன்மையான ரங்கநாதர் கோவில் உள்ளது. திருப்பதிக்கு அடுத்து, பிரசித்தி பெற்ற வைணவ தலம். பூலோக வைகுண்டம் எனவும் அழைக்கப்படுகிறது. இக்கோவிலில், 21 கோபுரங்கள் உள்ளன. ஆயிரங்கால் மண்டபம், ஒத்தக்கால் மண்டபம், சேஷராய மண்டபங்கள், 58 சன்னிதானங்கள், ஏழு பிரகாரங்கள், சந்திர புஷ்கரணி, சூரிய புஷ்கரணி என்ற இரண்டு தீர்த்தக் குளங்கள் ஆகியவை உள்ளன. ஸ்ரீரங்கம் கோவில் கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து, 10.50 கோடி ரூபாயில் திருப்பணி நடந்து வருகிறது. அன்னதான கூட விரிவாக்கம், ராஜகோபுர புனரைமைப்பு, சிலைகள் பராமரிப்பு பேன்ற பணிகள் நடந்து வருகின்றன. கோவிலில், 100 ஆண்டுகளுக்கு முன், துாண்களுக்கு இடையே கட்டப்பட்டிருந்த, செங்கல் சுவர்களை அகற்றும் பணியும் நடந்து வருகிறது.
இதுகுறித்து, கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது: கல் துாண்களால் கட்டப்பட்டுள்ள ரங்கநாதர் கோவிலில், 100 ஆண்டுகளுக்கு முன், பாதுகாப்பு கருதி, பிரகாரங்கள், சன்னிதானங்களில், துாண்களுக்கு இடையே செங்கல் சுவர்கள் கட்டப்பட்டன. ராமர், லட்சுமணர் சன்னிதி, வெளி ஆண்டாள் சன்னிதி உள்ளிட்ட சன்னிதிகளில், துாண்களுக்கு இடையே சுவர்கள் கட்டப்பட்டு, முன்பக்கம் இரும்பு கதவு அமைக்கப்பட்டுள்ளதால், கோவிலில் அழகிய சிற்ப வேலைப்பாடு நிறைந்த துாண்கள் மறைக்கப்பட்டன. சில சன்னிதிகளை சுற்றி, பாதுகாப்பு சுவர்கள் கட்டியுள்ளதால், பக்தர்கள் வலம் வர முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அவற்றை அகற்றிவிட்டு, முன் கோவில் இருந்த நிலையில், மாற்றிஅமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. சன்னிதிகளில், துாண்களை இணைத்து கட்டியுள்ள சுவர்கள் அகற்றப்படுகின்றன. முதற்கட்டமாக, வெளி ஆண்டாள் சன்னிதியில், செங்கல் சுவரை இடித்து, அப்புறப்படுத்தும் பணி துவங்கப்பட்டு உள்ளது. இப்பணி முடிந்ததும், கோவில் சிற்பங்கள், நவீன தொழில் நுட்பத்தில் இ யற்கை முறைப்படி, புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்படும். இதன் மூலம், 100 ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீரங்கம் கோவில் இருந்தது போன்ற நிலைக்கு மாறிவிடும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.