பதிவு செய்த நாள்
18
செப்
2014
02:09
மாமல்லபுரம் : கடலுார், அக்னீஸ்வரர் கோவில் பராமரிப்பின்றி அழிந்து வருகிறது. கோவிலை சீரமைக்க, இந்து சமய அறநிலைய துறை விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூவத்துார் அடுத்த, கடலுõர் கிராமத்தில், இந்து சமய அறநிலைய துறையின்கீழ், பல நுõற்றாண்டுகள் பழமைவாய்ந்த சொக்கநாயகி உடனுறை அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. மண்ணில் புதைந்தன : மகாமண்டபம், வெளி பிரகாரம், பஞ்சகோஷ்டம் என, பல்வேறு கட்டுமானங்களுடன் கூடிய இந்த கோவிலில், மகாமண்டபத்தில், விநாயகர், நாகேந்திரர், பைரவர், வெளிப் பிரகாரத்தில் விநாயகர், சூரியனார், நந்தி ஆகிய சிலைகள் உள்ளன.
பஞ்சகோஷ்டத்தில், நடன கணபதி, தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர். துவார பாலகர், நவக்கிரகங்கள் இல்லை. வளாக வடகிழக்கில் சொக்கநாயகி சன்னிதி, ஆறுமுகர் சன்னிதி ஆகியவை உள்ளன. மகாமண்டப பிரகார வெளிப்புறம், மூன்றடி உயரத்தில், மூன்று முதல் ஐந்து வரி வரை கல்வெட்டுக்கள் உள்ளன. அதே மண்டப பைரவர் சிற்பம் துவங்கி, நாகேந்திரர் சிற்பம் வரை சுரங்க பாதையும் இருப்பதாக பகுதிவாசிகள் நம்புகின்றனர். கோவில் பராமரிப்பின்றி, தற்போது சீரழிந்து வருகிறது. மகாமண்டப கற்சுவர், மேற்கூரை பெயர்ந்து, சரிந்து இடிபாடுகளுடன் கிடக்கிறது. சொக்க நாயகி அம்மன் சன்னிதிக்கும் அதேகதிதான். கோவிலுக்குரிய பல்வேறு கல்வெட்டுகள், மண்ணில் புதைந்துவிட்டன. பல தலைமுறைகளாக உற்சவம் எதுவும் நடக்கவில்லை.
கண்டு கொள்ளவில்லை : இதுகுறித்து, பகுதிவாசிகள் கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் கலெக்டர் ராஜாராமன் மனைவி மூலம், 13 ஆண்டுகளுக்கு முன், அக்னீஸ்வரர் விமானத்தை புனரமைக்கும் பணி துவங்கியது. பல இடையூறுகளால், அந்த பணி முற்றுப்பெறவில்லை. கோவிலுக்கு சொந்தமான விவசாய நிலத்தை அனுபவித்து வருபவர்களும், அறநிலைய துறையும் கண்டுகொள்ளவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.