பதிவு செய்த நாள்
20
செப்
2014
11:09
பெங்களூரு: பாரதி நகர், வெங்கடேச பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத சனிக்கிழமை பிரம்மோற்சவ விழா, இன்று துவங்குகிறது.பெங்களூரு, திம்மையா ரோடு கிராஸ், பாரதி நகரில் அமைந்துள்ள, வெங்கடேச பெருமாள் சன்னிதி பக்தானந்த சபா மற்றும் அறக்கட்டளை சார்பில், புரட்டாசி மாதம் சனிக்கிழமை விழா ஆண்டுதோறும், பிரம்மோற்சவ விழாவாக நடத்தப்படுகிறது. இந்த கோவிலில் பொங்கல் திருவிழா, மார்கழி மாதத்தில், 30 நாள் பூஜைகள், வைகுண்ட ஏகாதசி ஆகியனவும் பக்தி பரவசத்துடன் நடத்தப்படுகின்றன.
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று, அபிஷேகம், தோமாலை சேவை, சேஷ வாகனம், மாலையில் பஜனை, இரண்டாவது சனிக்கிழமையான, 27ம் தேதி, காலையில் அபிஷேகம், தோமாலை சேவை, சுவாமிக்கு கல்யாண உற்சவம், கருட வாகனம், மாலையில் பஜனை ஆகியவை நடக்கின்றன.மூன்றாவது சனிக்கிழமை அக்., 4ம் தேதி காலையில், அபிஷேகம், தோமாலை சேவைக்கு பின், சுவாமி, வெள்ளி கவசத்துடன், வைர கிரீடம் அணிவிக்கப்பட்டு, ஆராதனை, மஹா ஹோமம், உற்சவ மூர்த்தி திருவீதி உலா வருகிறது. பகலில், பக்தர்களுக்கு அன்னதானம், மாலையில் நாலாயிர திவ்யபிரபந்த சேவை, இரவில் பக்தர்களின் பஜனை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.கோவிலில் துலாபார சேவை செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. புரட்டாசி மாத விழாவில் பங்கேற்று, பெருமாளின் அருள் பெற, கோவில் மானேஜிங் டிரஸ்டி முனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.