பதிவு செய்த நாள்
22
செப்
2014
10:09
நாகர்கோவில்: நவராத்திரி விழாவுக்காக சுவாமி விக்ரகங்கள் பவனியாக நேற்று திருவனந்தபுரம் புறப்பட்டன. நாளை இந்த பவனி திருவனந்தபுரம் சென்றடையும். பண்டைய காலத்தில் திருவிதாங்கூர் ராஜ்யத்தின் தலைநகராக கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பத்மனாபபுரம் விளங்கியது. இங்குள்ள அரண்மனை வளாகத்தில் சரஸ்வதி கோயில் உள்ளது. இது கவியரசர் கம்பர் வழிபட்ட சரஸ்வதிதேவி சிலை என்று வரலாறு கூறுகிறது. மன்னர்கள் காலத்தில் இக்கோயிலில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது. பின்னர் நிர்வாக வசதிக்காக 1840-ம் ஆண்டு சுவாதி திருநாள் மன்னர் காலத்தில் தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னரும் நவராத்திரி விழா தடையின்றி நடப்பதற்காக மன்னர் உத்தரவு படி சரஸ்வதிதேவி சிலை யானை மீது பவனியாக திருவனந்தபுரம் எடுத்து செல்லப்பட்டது.
மன்னர் ஆட்சி மறைந்த பின்னரும், அந்த மரபு மறக்கப்படாமல், இரு மாநிலங் களுக்கிடையே பல பிரச்னைகள் இருந்தாலும் இந்த விழா இருமாநிலங்களை இணைக்கும் விழாவாக நடைபெற்று வருகிறது. வரும் 24-ம் தேதி நவராத்திரி பூஜை தொடங்க உள்ளதை ஒட்டி நேற்று காலையில் பத்மனாபபுரத்தில் இருந்து சுவாமி பவனி புறப்பட்டது. கேரள- போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் இந்த ஊர்வலம் புறப்பட்டது. சரஸ்வதிதேவியுடன், வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை விக்ரங்களும் இந்த பவனியில் எடுத்து செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்துக்கு முன்னால் மன்னர் பயன்படுத்திய உடைவாள் எடுத்து செல்லப்பட்டது. இந்த வாளை கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ்சென்னித்தலா, குமரி மாவட்ட தேவசம்போர்டு ஆணையர் ஞானசேகரிடம் வழங்கினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா நவராத்திரி ஊர்வலத்தை கேரள அரசு ஒரு திருவிழாவாக கொண்டாடி வருகிறது. இந்த பவனி இன்று கேரள மாநில எல்லையான களியக்காவிளை வரும் போது கேரள அரசு சார்பில் பூரண வரவேற்பு கொடுக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார். நாளை பவனி திருவனந்தபுரம் சென்றடையும். 24-ம் தேதி நவராத்திரி விழா தொடங்குகிறது.
மத்திய அமைச்சர் வருத்தம்: நவராத்திரி பவனி புறப்பட்ட போது கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ்சென்னித்தலா, தேவசம்போர்டு அமைச்சர் சிவகுமார், பண்பாட்டுத்துறை அமைச்சர் ஜோசப் மற்றும் ஏராளமான உயர் அதிகாரிகளும், 300-க்கும் மேற்பட்ட கேரள போலீசாரும் கலந்து கொண்டனர். ஆனால் தமிழகத்தில் சார்பில் அமைச்சர்களோ, அதிகாரிகளோ, மாவட்ட அதிகாரிகளோ கலந்து கொள்ளவில்லை. நேற்று பத்மனாபபுரமும், ஊர்வலம் சென்ற பாதையும் மாவட்டம் கேரளாவில் இருப்பதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. பண்டைய காலத்தில் இந்த ஊர்வலத்தை தமிழக அதிகாரிகளும், போலீசாரும் மாவட்ட எல்லை வரை கொண்டு சென்று, எல்லையில் கேரள அரசிடம் ஒப்படைப்பார்கள். ஆனால், தற்போது தமிழக அதிகாரிகளும், அமைச்சர்களும், போலீசாரும் இந்த விழாவை கண்டு கொள்வதில்லை. இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: கேரளாவில் இருந்து மூன்று அமைச்சர்கள் வந்துள்ளார்கள், தமிழக அரசு சார்பில் எவரும் வராதது துரதிஷ்டவசமானது, என்றார்.