புதூர்: மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் புரட்டாசி பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. அக்.,6ல் காலை 10 மணிக்கு தெப்பத் திருவிழா நடக்கிறது. இக்கோயில் திருவிழாக்களில் முக்கியமான இத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடிமரம் முன் பெருமாள் தேவியருடன் எழுந்தருளினார். தீபாராதனை முடிந்து, கருடாழ்வார் உருவம் கொண்ட கொடி மேள, தாளம் முழங்க கோயிலை சுற்றி ஊர்வலமாக எடுத்துவந்து கொடியேற்றப்பட்டது. மாலை அன்ன வாகனத்தில் பெருமாள் வலம் வந்தார். தினமும் காலை, மாலை பல்வேறு அவதாரங்களில் எழுந்தருளுகிறார். அக்., 4 பூப்பல்லக்கு, அக்., 6ல் தெப்ப உற்சவமும் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி வரதராஜன் செய்துள்ளனர்.