பதிவு செய்த நாள்
30
செப்
2014
11:09
காரைக்கால்: திருநள்ளார் சனிபகவான் கோவிலில், டிச.16ம் தேதி, சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி, நளன் குளம் பகுதியை மேம்படுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. காரைக்கால் திருநள்ளாரில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். நவகிரக ஸ்தலங்களில், சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது. உலக பிரசித்தி பெற்ற இக் கோவிலுக்கு உள் நாட்டிலிருந்தும் வெளி நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இங்கு, இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சனிப்பெயர்ச்சி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. வரும் டிச.16ம் தேதி, சனி பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிகம் ராசிக்குப் பிரவேசிக்கிறார். அதையொட்டி, சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. திருநள்ளாரை கோவில் நகரமாக உருவாக்க, ரூ.150 கோடியில் திட்டம் தீட்டி, பணிகள் துவக்கப்பட்டது. முதல் கட்டமாக, ரூ.75 கோடியில் பணிகள் துவக்கப்பட்டது. எனினும், மந்தமான நிலையிலேயே பணிகள் நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் புனித நீராடும் நளன் குளம் புனரமைக்கப்பட்டு, கடந்தாண்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது. குளத்தில் புனித நீராடும் பக்தர்கள், உடை மாற்றுவதற்கான அறை மற்றும் கழிவறை வசதி இல்லாமால் மிகுந்த சிரமப்பட்டனர். அதையடுத்து, நளன் குளத்தை சுற்றிலும் ரூ.3 கோடி மதிப்பில் வணிக வளாகம், பெண்கள் உடை மாற்றும் அறைகள், கழிவறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, முடியும் நிலையில் உள்ளது.இதுகுறித்து பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகசுந்தரம் கூறுகையில், நளன் குளத்தை சுற்றிலும் கடைகள் மற்றும் கழிவறைகள், பெண்கள் உடை மாற்றும் அறைகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.6.5 கோடி செலவில் கியூ காம்ப்ளக்ஸ் கட்டுமானப் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் வரும் சனிப்பெயர்ச்சி விழாவுக்கு முன்பாக முடிக்கப்படும் என்றார்.