நவராத்திரியின் ஏழாம் நாளில் அம்பிகையை பிராஹ்மியாக வழிபாடு செய்ய வேண்டும். அம்பிகையின் திருவடிகளைத் தாமரை மலரில் வைத்திருப்பது போல அலங்கரிக்க வேண்டும். மலர்க்கோலமிட்டு வெண்தாமரை, தாழம்பூ மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும். சத்து மாவு, பழ வகைகளைப் படைத்து வழிபட்டால் நீண்டநாள் விருப்பம் இனிதே நிறைவேறும். மதுரை மீனாட்சி நாளை மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் காட்சி அளிக்கிறாள். பிரம்மாவை நோக்கி தவம் செய்த மகிஷன், பெண்ணால் மட்டுமே தனக்கு அழிவு உண்டாக வேண்டும் என்னும் வரத்தைப் பெற்றான். இதனால், மும்மூர்த்திகளாலும் தன்னை நெருங்க முடியாது என்ற ஆணவத்துடன் திரிந்தான். உலக நாயகியான பராசக்தி, சிங்க வாகனத்தில் திரிசூலத்துடன் அசுரனை அழிக்கப் புறப்பட்டாள். மும்மூர்த்திகளும் அவரவர் சக்தியை தேவிக்கு வழங்கி வழியனுப்பினர். சூலத்தால் அசுரனைக் கொன்று மகிஷாசுரமர்aத்தினியாக வெற்றி வாகை சூடினாள். அந்த கோலத்தில் நாளை மீனாட்சி காட்சி தருகிறாள். இந்தக் காட்சியைத் தரிசித்தால் தைரியசாலியாக விளங்கலாம்.