பதிவு செய்த நாள்
01
அக்
2014
10:10
மேலூர்: மதுரை மேலூர் அருகே வெள்ளலூரில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழா நேற்று நடந்தது. இன்று(அக்., 1)தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவையொட்டி 56 கிராமங்களை சேர்ந்த ஏழு குழந்தைகள் அம்மனாக பாவிக்க செப்., 16ல் தேர்வு செய்யப்பட்டனர். வெள்ளலூர் கோயில் வீட்டில் பதினைந்து நாட்கள் தங்கினர். இந்த நாட்களில் மக்கள் எண்ணெய் தாளிதம் இன்றி கடும் விரதமிருந்தனர். நேற்று கோயில் வீட்டில் இருந்து 11 பிரிவுகளை சேர்ந்த 22 அம்பலகாரர்கள் மற்றும் இளங்கச்சிகள் தலைமையில் (இளைஞர்கள்) எட்டு கி.மீ., தூரத்திலுள்ள கோயில்பட்டி ஏழை காத்தம்மன் கோயிலுக்கு நடந்து சென்றனர்.
அதற்கு முன்பாக பெண்கள் தென்னங்குருத்தால் ஆன மதுக்கலயம் ஏந்தியும், நோய் நொடியின்றி வாழ வேண்டியவர்கள் உடலில் வைக்கோல்பிரி சுற்றியும், குழந்தை வரம் கேட்டவர்கள் பதுமைகள் மற்றும் பூக்கொடைகளை சுமந்தும் சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து பூஜாரி சின்னதம்பி தலைமையில் அம்மனாக பாவிக்கும் ஏழு குழந்தைகள் மாலை மரியாதையுடன் கோயிலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இன்று தேரோட்டம் நடக்கிறது. டி.எஸ்.பி.,க்கள் மங்களேஸ்வரன், மணிரத்னம், இன்ஸ்பெக்டர்கள் கழனியப்பன், ராஜமோகன் உட்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நடமாடும் மருத்துவ குழுவினர் முதலுதவி செய்தனர்.