பதிவு செய்த நாள்
18
அக்
2014
10:10
சபரிமலை: ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. ஐயப்பனை தரிசிக்க கொட்டும் மழையில் பக்தர்கள் அலைமோதினர்.நேற்று மாலை 5:30 மணிக்கு, மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தந்திரி கண்டரரு ராஜீவரரு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். அதன்பின், வேறு பூஜைகள் நடக்கவில்லை. கோயில் நடை திறந்த போது 18 படியேற பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
மாலை 4:00 மணி முதலே பக்தர்கள் படியேற காத்திருந்தனர். ஒழுங்குபடுத்த போதிய போலீசார் இல்லாததால், பக்தர்கள் முண்டியடித்தனர். ஒரு மணி நேர நெரிசலுக்கு பின், நிலைமை சீரானது. மாலையில் பெய்த மழையும் பக்தர்களை சிரமப்படுத்தியது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் நெய் அபிஷேகம் துவங்கும். காலை 7:30 மணிக்கு உஷபூஜை முடிந்த பின் மேல்சாந்தி தேர்வு நடக்கும். நேர்முகத்தேர்வு நடத்தி சபரிமலைக்கு 9 பேர், மாளிகைப்புறத்துக்கு 4 பேர் பட்டியலை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தயாரித்துள்ளது. இதில் சபரிமலைக்கு ஒருவரும், மாளிகைப்புறத்தம்மன் கோயிலுக்கு ஒருவரும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர். இவர்கள் வரும் கார்த்திகை 1 ம் தேதி முதல் ஒரு ஆண்டுக்கு சபரிமலையில் தங்கி பூஜைகள் செய்வர். ஐப்பசி மாத பூஜை முடிந்து அக்.,22ல் நடை அடைக்கப்பட வேண்டும். சித்திரை திருநாள் மன்னரின் பிறந்தநாளை முன்னிட்டு நடக்கும் ’சித்திரை ஆட்ட திருநாள் பூஜை’ அக்., 23 ல் நடக்க உள்ளது. அன்றும் நடை திறந்திருக்கும். அன்று இரவு நடை அடைக்கப்படும். அதுவரை எல்லா நாட்களிலும் வழக்கமான பூஜைகளுடன் உதயாஸ்மனபூஜை, சகரஸ்கலசபூஜை, படிபூஜை நடக்கும்.