ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ‘கோடி தீர்த்தம்’ பாட்டிலை பக்தர்களிடம், கூடுதல் விலைக்கு விற்று முறைகேடு நடப்பதாக இந்து முன்னணியினர் குற்றம்சாட்டியுள்ளனர். ராமேஸ்வரம் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில், கடைசி தீர்த்தமான கோடி தீர்த்தம் பல சிறப்பு அம்சங்களை கொண்டது. புனிதமான கோடி தீர்த்தத்தில் சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் செய்து பூஜிப்பதால், கோயிலுக்குள் நீராடும் பக்தர்கள் கோடி தீர்த்தத்தை கேட்டு வாங்கி செல்வர். இதற்காக கோயில் நிர்வாகம், கோடி தீர்த்தம் அடங்கிய (500 மி.லி) பாட்டிலை 20 ரூபாய்க்கு விற்கிறது. கோயில் நிர்வாகத்தின் அலட்சியத்தால், தன்னிச்சையாக செயல்பட துவங்கிய ஊழியர்கள், ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக 5 முதல் 10 ரூபாய் வரை விற்றுவருகின்றனர்.
மேலும் வாகன நிறுத்துமிடத்தில் கட்டண வசூலை தனியாருக்கு வழங்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இவற்றை கண்டித்து ராமேஸ்வரத்தில் இந்து முன்னணியினர் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். மாவட்ட இந்து முன்னணி செயலாளர் ராமமூர்த்தி கூறியதாவது:பக்தர்களிடம் பணம் பறிப்பதில் நிர்வாகம் முக்கியத்துவம் கொடுக்கிறது. கோடி தீர்த்த பாட்டிலை கூடுதலாக விற்று முறைகேடு நடக்கிறது. வாகன நிறுத்துமிடத்தை தனியாருக்கு ஏலம் விட்டால், பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் கேட்டு மிரட்டுவர். இதுகுறித்து அறநிலையத்துறை கமிஷனருக்கு புகார் செய்துள்ளேன், என்றார்.