பதிவு செய்த நாள்
20
அக்
2014
11:10
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில், மேற்கு கோபுரம் 18.5 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் முடிந்து பளிச்சிடுகிறது. விருத்தாசலத்தில் 1,500 ஆண்டுகளுக்கு முன், விபச்சித்தி முனிவர் சிவபெருமானை பிரதிஷ்டை செய்து, திருப்பணி துவங்கி, கண்டராதித்த சோழன், ராஜராஜசோழன் உள்ளிட்டோர் காலங்களில் ஐந்து கோபுரங்கள், ஐந்து பிரகாரங்கள், ஐந்து நந்திகள், ஐந்து கொடி மரங்கள் என ஐந்தின் சிறப்புகளாக கட்டப்பட்டது. கோவில் கோபுரங்களில் கலைநயமிக்க சுதை வேலைப்பாடுகள் சிறப்புற்றிருந்தன. கடந்த 2002ல், கோபுரங்களில் வண்ணம் தீட்டப் பட்டு குடமுழக்கு நடந்தன. அதையடுத்து, முறையான பராமரிப்பின்றி, கோபுரத்தில் ஆல, அரசங் கன்றுகள், செடி, கொடிகள் வளர்ந்து, ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டன. மேற்கு கோபுரத்திலிருந்த அழகிய பொம்மைகள் சேதமடைந்து, பெயர்ந்து விழுந்தன. கோபுரத்திற்கு ஆபத்து ஏற்படும் முன், செடி கொடிகளை அகற்றி சீரமைக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டி தினமலர் நாளிதழில் கடந்தாண்டு ஏப்ரல் 24ம் தேதி செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து, ரசாயன மருந்துகளை தெளித்து செடிகளை அழிக்க முயற்சித்தனர். அது போதிய பலனளிக்கவில்லை. பின்னர், கோவில் நிர்வாகம் மேற்கு கோபுரத்தை 18.5 லட்சம் ரூபாயில் புணரமைக்க முடிவு செய்து, கடந்த நவம்பர் 14ம் தேதி பாலாலய யாகத்துடன் பணியை துவக்கியது. கடந்த 11 மாதங்களாக நடந்து வந்த பணியில் சேதமான பொம்மைகளை அகற்றி, புதிய பொம்மைகள் அமைத்து, வர்ணம் தீட்டப் பட்டது. இப்பணிகள் முடிந்து, மேற்கு கோவில் கோபுரம் பளிச்சென காட்சியளிக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், கட்டிய பழமை வாய்ந்த ÷ காபுரத்தின் புணரமைப்பு பணிகள் முடிந்துள்ளதால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.