பதிவு செய்த நாள்
20
அக்
2014
11:10
மணப்பாறை: மணப்பாறை அருகே, ஆலமரத்தில் கூட்டமாக வாழும் வவ்வால்கள் கலைந்து செல்லாமல் இருக்க, இரண்டு கிராம மக்கள், பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ளது சாம்பட்டி கிராமம். இங்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவ்வூரின் அருகில், பல நுாற்றாண்டு பழைமை வாய்ந்த ஆரியபெருமாள் கோவில் உள்ளது. 50 ஆண்டுக்களுக்கும் மேலாக இங்கு வழிபாடு நடக்கவில்லை. இக்கோவில் மண்டபத்தில் உள்ள ஆலமரத்தில், பழம் தின்னும் வவ்வால்கள் கூட்டம், கூட்டமாக வந்து தங்கியுள்ளன. வவ்வால் கூட்டம் வந்த பின், அப்பகுதியில் மழை நன்றாக பெய்ததுடன், விவசாயம் செழிப்படைந்தது.இதனால், ஆரியபெருமாளே வவ்வாலாக வந்து, ஊரை பாதுகாப்பதாக, அப்பகுதி மக்களிடையே நம்பிக்கை ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்கள், வவ்வாலை வேட்டையாடாமலும், வேட்டையாட வருபவர்களையும் தடுத்தும் வந்தனர்.தற்போது, மரத்தில், 5,000க்கும் அதிகமான வவ்வால்கள் தங்குகின்றன.
தீபாவளி மற்றும் விசேஷ நாட்களில், பட்டாசு வெடித்தால், வவ்வால்கள் பயந்து ஓடி விடும் எனக் கருதும் பொதுமக்கள், தீபாவளிக்குக்கூட, பட்டாசுகள் வெடிப்பதில்லை. உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி, தீபாவளியை கொண்டாடி முடிக்கின்றனர்.பத்து ஆண்டுகளாக, பட்டாசு சத்தமே, இந்த ஊரில் கேட்டதில்லை என, இக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.அதேபோல், மணப்பாறை அருகே அமயபுரம் பஞ்சாயத்து தோப்புப்பட்டியில், பழைமை வாய்ந்த முனியப்பன் கோவில் வளாகத்தில் உள்ள ஆலமரங்களில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக, வவ்வால்கள் கூட்டமாக தங்குகின்றன. இப்பகுதியிலும் பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதில்லை.