ஆவளியே தீபாவளி! ஒளிமயமான பண்டிகை இது. இந்த நன்னாளில் 21 விளக்குகளையாவது ஏற்றி வைக்க வேண்டும். தீபாவளியை ஒட்டி ஏராளமான கதைகள் உண்டு. அவற்றில் முதலாவதாகச் சொல்லப்படுவது நரகாசுரன் கதை. நரகாசுரனை சம்ஹாரம் செய்த இந்த திருநாளுக்கு நரக சதுர்த்தசி என்ற பெயரும் உண்டு. எவ்வளவோ அசுரர்கள் சம்ஹாரம் செய்யப்பட்டிருக்கும் போது, நரகாசுரன் சம்ஹாரத்தில் மட்டும் என்ன விசேஷம்? அதற்காக ஒரு பண்டிகையா என்ற சந்தேகம் எழுந்தால்.... நரகாசுரன் மட்டுமே கண்ணனிடம், நான் இறக்கும் இந்த நாளை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். அனைவரும் எண்ணெய் தேய்த்துக் குளித்துப் புத்தாடை அணிந்து விளக்கேற்றி வைத்து வழிபட வேண்டும். மக்களுக்கெல்லாம் தாங்கள் எல்லா விதமான மங்கலங்களையும் அருள வேண்டும் என வேண்டினான். கண்ணனும், அப்படியே நடக்கும் என அருள்புரிந்தார். நரகாசுர வதம் என்பது நம்மிடம் உள்ள தீய குணங்களை நீக்கிக் கண்ணன் நமக்கு அருள்புரிவதையே குறிக்கும். கிரி, ஜலம், அக்னி, வாயு, ஆகாயம் ஆகிய ஐந்தாலும் அமைக்கப்பட்ட கோட்டைகளைத் தாண்டி கண்ணன் உட்புகுந்து அசுரனை வெற்றி கொண்டார். பஞ்சபூதத்தால் உருவான இக்கோட்டைகள் பஞ்சபூதத்தால் ஆன நம் உடம்பைக் குறிக்கும். அதற்குள் இருக்கும் அசுரனே நாம். நரகாசுர வதம் பற்றி பகவான் ரமணர், தீய எண்ணங்கள் தாம் நரகன். அவன் குடியிருக்கும் வீடு தான் நம் உடல். அந்த மாயாவியை ஒழித்து, தானாக அதாவது ஆத்மஜோதியாக திகழ்வதே தீபாவளி எனக் கூறியுள்ளார். இப்படி மகான்கள் போற்றிய தீபாவளி பற்றிய கதை பல உண்டு. அவற்றில் சில... பாணாசுரன் தலைமையில் அசுரர்கள் திருமகளை அபகரித்துச் செல்ல முயன்றனர். அவள் அங்கிருந்த தீபச்சுடரில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு மறைந்தாள். அன்றைய தினமே தீபாவளி. அதனால், தீபமேற்றி திருமகளை இந்நாளில் பூஜிக்க வேண்டும். இதை முன்னிட்டே, வடமாநில வியாபாரிகள் தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்கின்றனர். ராவணனைச் சம்ஹாரம் செய்து விட்டு ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோர் அயோத்திக்கு திரும்பிய நாளே தீபாவளி. பதினான்கு ஆண்டுகளுக்குப் பின் அயோத்தி மக்கள் அவர்களைத் தரிசித்த மகிழ்ச்சியில் விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து வரவேற்று மகிழ்ந்தனர். ராமரின் தாயான கோசலை சீதையிடம், அம்மாசீதா! திருமகளான நீ இல்லாமல் இந்த அரண்மனையே இருண்டு போனது. இப்போது விளக்கேற்றி வை. இருள் நீங்கி எங்கும் ஒளி பிரகாசிக்கட்டும்! என்றாள். தீபாவளியை முன்னிட்டு பல கதைகள் வழங்கினாலும், அனைத்திலும் அடிப்படை விஷயம் இருள் நீங்கட்டும்! ஒளி பரவட்டும்! என்பது தான். நம் உள்ளும் புறமும் ஒளி வீச, வாழ்வில் உல்லாசம் பொங்க அந்த கண்ணனும் திருமகளும் அருள் புரியட்டும்.