பதிவு செய்த நாள்
24
அக்
2014
11:10
மடத்துக்குளம் : ’அக்குபஞ்சர்’ மருத்துவ சிகிச்சைக்கு முன்னோடியாக, நமது முன்னோர்கள், பல நுாற்றாண்டுகளுக்கு முன்பே ’பாத குறடு’ முறையை கடைபிடித்துள்ளனர். மனித உடலின் முக்கிய உறுப்புகளுக்கு செல்லும், நரம்பு முடிச்சுகளை அழுத்துவதன் மூலம், ரத்த ஓட்டத்தையும், உணர்வுகளையும் சீர்செய்து, நோய்களுக்கு தீர்வுகாணும் முறை ’அக்குபஞ்சர் சிகிச்சை’ என்றழைக்கப்படுகிறது. அக்காலத்தில் நோய்கள் தீர, தெய்வ வேண்டுதல்களையே மக்கள் நம்பியிருந்தனர்.நோய் குணமாக வேண்டி நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். இதில் ஒன்று ’பாதகுறடு’ நேர்த்திக்கடன். பாதங்களில் உள்ள நரம்பு முடிச்சுகளை, கூர்மையான ஆணிகளால் தொடர்ந்து அழுத்துவதால், நரம்பு செல்லும் இடங்களுக்கு, இந்த அழுத்தம் பரவுவதுடன், ரத்த ஒட்டம் சீராகி வலி குறையும். இதற்கு ’பாதகுறடு’ நேர்த்திக்கடன் முறையை மக்கள் பின்பற்றினர்.மரப்பலகையில் காலணியின் அடிப்பாகம் செய்து, அதில், குறிப்பிட்டஅளவு இடைவெளி விட்டு,4 இன்ச் உயரமுடைய, 50 இரும்பு ஆணிகள், அடிக்கப்பட்டு, முனைகள் மழுங்கடிக்கப்படும். பெருவிரல் பிடிமானத்துக்கு, மரத்தில் அலங்காரத்துடன் கூடிய, பிடியை அமைத்தனர்.இது, ’பாதகுறடு’ என அழைக்கப்படுகிறது. 100 ஆண்டுகளுக்கு முன் அனைத்து கோவில்களிலும் காணப்பட்ட இவை, தற்போது, சில பழமையான கோவில்களில், பாதுகாக்கப்படுகின்றன. திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம், தன்னாசியப்பன் கோவிலில் இந்த ’பாத குறடு’ உள்ளது. இந்த கோவில் பூசாரி ராமசாமி கூறுகையில், ”கை, கால்வலி தீர, வேண்டி கொள்பவர்கள், பாத குறடு செய்து, அதில் நடந்து வருவார்கள். சிலர், கோவிலுக்கு காணிக்கையாகவும் வழங்குவர். இந்த கிராமத்தில், 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்தமுறை இருந்தது, இப்போது வழக்கத்தில் இல்லை,” என்றார்.