பதிவு செய்த நாள்
25
அக்
2014
10:10
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் துவங்கியது. பக்தர்கள் கடலில் புனித நீராடி, பச்சை நிற ஆடையணிந்து விரதம் துவக்கினர். திருச்செந்தூரில் நேற்று அதிகாலை 2:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 2:30 க்கு விஸ்வரூப தரிசனமமும், 3:00 க்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.
காலை 6:30 க்கு ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினார். அதன்பின், யாகசாலை பூஜை துவங்கியது. பூர்ணாகுதி முடிந்தவுடன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதணைகள் நடந்தது. பின்னர், மூலவருக்கு மகா தீபாராதணை நடந்தது. கோயிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி, பச்சை நிற ஆடையணிந்து காப்புகட்டி சஷ்டி விரதம் துவக்கினர். தங்க ரதத்தில் சுவாமி எழுந்தருளி, வீர வாள் வகுப்பு, வேல் வகுப்பு பாடல்களுடன் சண்முக விலாச மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள், "வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா” என்ற கோஷத்துடன் சுவாமியை தரிசித்தனர். மாலை 4:30 மணிக்கு சுவாமி, அம்பாளுடன் தங்கத்தேரில் கிரி வலம் வந்து, திருவாவடுதுறை சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதணைகள் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.