பதிவு செய்த நாள்
29
அக்
2014
06:10
தூத்துக்குடி: அரோகரா கோஷத்துடன், திருச்செந்தூர் கடற்கரையில் சூரனை, சுவாமி ஜெயந்திநாதர் சம்ஹாரம் செய்தார். திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி விழா அக்.,24 ல் யாகசாலை பூஜையுடன் துவங்கியது. அன்று முதல் பக்தர்கள் கடலில் புனித நீராடி பச்சை ஆடை அணிந்து சஷ்டி விரதம் மேற்கொண்டனர்.
தினமும் காலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. மதியம் 12 மணிக்கு யாகசாலையில் எழுந்தருளும் சுவாமி ஜெயந்தி நாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதணை நடந்தது. 6ம் நாளான காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது. மதியம் 12 மணிக்கு தீபாரதணை நடந்தது. 12.45 க்கு தங்கசப்பரத்தில் சுவாமி ஜெயந்தி நாதர் யாகசாலையில் எழுந் தருளி,வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன்,மேள தாளத்துடன் சண்முகவிலாசம் வந்தடைந்தார். மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில், சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேக, அலங்காரம் நடந்தது.
கடற்கரையில் வதம்: மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்திற்காக கடற்கரைக்கு எழுந்தருளினார். கஜமுகத்துடன் சூரபத்மன் சுவாமியை மூன்று முறை வலம் வந்து போரிட்டான். ஜெயந்தி நாதர் அவனது தலையை மாலை 5.07 க்கு கொய்தார். பின் சிங்கமுகத்துடன் வலம் வந்து போரிட்ட சூரனின் தலையை மாலை 5.27க்கு கொய்தார். பின் சுய ரூபத்துடன் போரிட்ட சூரனின் தலையை மாலை 5.47க்கு துண்டித்தார்.
லட்சக்கணக்கான பக்தர்கள்: இந் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் திரண்டு ‘வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா’என கோஷம் எழுப்பினர். அதன் பின்பு சுவாமி சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அலங்காரம், தீபாரதணை நடந்தது. கிரி பிரகாரம் வலம் வந்து சுவாமி கோயில் வந்து சேர்ந்தார்.