பதிவு செய்த நாள்
30
அக்
2014
12:10
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த மகாராஜகடையில், மழை பெய்ய வேண்டி, கழுதைகளுக்கு திருமணம், வெகு விமரிசையாக செய்யப்பட்டது. திருமண சிறப்பு விருந்தில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆந்திர மாநில எல்லையோரம் அமைந்துள்ளது மகாராஜகடை. இக்கிராமத்தில், ஆற்று பாசனம் மற்றும் கால்வாய் பாசனம் ஏதும் இல்லாத நிலையில், நிலத்தடி நீரை கொண்டு விவசாயம் செய்யப்படுகிறது. ஆந்திர மாநில எல்லையில் உள்ள மலைகளில் இருந்து வரும் தண்ணீரால், மகாராஜகடை கிராமத்தில் உள்ள கிணறு மற்றும் போர்வெல்களில், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, வாழை, கரும்பு, பப்பாளி, தக்காளி, கத்திரி போன்ற பண பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சில தினங்களாக, தொடர்ந்து பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. ஆனால், மகாராஜகடை சுற்றுவட்டார பகுதியில், மூன்று ஆண்டுகளாக, போதிய மழை பெய்யாததால், நிலத்தடி நீர்மட்டம், ஆயிரம் அடிக்கு கீழ் சென்று, விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனால், தங்கள் பகுதியில் மழை பெய்ய, வருண பகவானை வேண்டி, ஊர் பொதுமக்கள், கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்க, முடிவு செய்தனர். இதற்காக, தங்கள் ஊரில் உள்ள யோகராஜா, யோகராணி ஆகிய கழுதைகளுக்கு, திருமணம் செய்து வைக்க, திருமண பத்திரிகை அச்சடித்து வினியோகம் செய்தனர். நேற்று காலை, மகாராஜகடை பூவவுண்டன் ஏரிக்கு, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட, புத்தாடை அணிந்த கழுதைகளை, மேள தாளங்கள் முழங்க, பொதுமக்கள் அழைத்து வந்தனர். அங்கு கூடியிருந்த பெண்கள், வாழ்த்து பாடல்களை பாடினர். தொடர்ந்து, சிறப்பு யாகம் செய்யப்பட்டது. காலை, 9.30 மணிக்கு, முகூர்த்தம் நடந்தது. திருமண விழாவில், மகாராஜகடை, சிந்தகம்பள்ளி, தாசினாவூர், தங்காடி குப்பம், கொல்லூர், மாரேகவுண்டனூர், நலகுண்டலப்பள்ளி, நாரலப்பள்ளி, முலுக்கலப்பள்ளி, பைரே கவுண்டனூர், சின்ன சக்னாவூர், பெரிய சக்னாவூர், ஏக்கல்நத்தம், மேகலசின்னம்பள்ளி, பெலவர்த்தி ஆகிய கிராமங்களை சேர்ந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு, திருமண சிறப்பு விருந்து வழங்கப்பட்டது.