பதிவு செய்த நாள்
31
அக்
2014
10:10
பழநி: கந்த சஷ்டி விழாவின் நிறைவாக பழநி மலைக்கோயிலில் சண்முகர், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. மலைக்கோயிலில் கந்த சஷ்டிவிழா அக்.,24ல் காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. கோயில் யானை கஸ்தூரி மலைக்கோயிலில் தங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் நடந்தது. நேற்று, திருக்கல்யாணத்தை முன்னிட்டு விநாயகர் பூஜையுடன், ஆறு கலசங்கள் வைத்து சிறப்பு யாகங்கள் செய்யப்பட்டன.
காலை 10:30 மணிக்கு மாங்கல்ய தாரணம், மாலை மாற்றுதல், தீபாராதனை, வேத பாராயணம் நடந்தது. திருமண கோலத்தில் சண்முகர், வள்ளி, தெய்வானை அருள்பாலித்தனர். பெரியநாயகியம்மன் கோயிலில் இரவு 7 மணிக்கு, முத்துகுமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. இரவு 8 மணிக்கு சுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் திருவுலா வந்தார். இணை ஆணையர் (பொ) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, சித்தனாதன் அன் சன்ஸ் செந்தில்குமார், கந்தவிலாஸ் செல்வகுமார், பாலாஜிபவன் ஹரிஹரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.