பதிவு செய்த நாள்
31
அக்
2014
11:10
திருப்பதி: திருமலையில், நவம்பர் 4ம் தேதி, ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருமலையில், ஏழுமலையானுக்கு தினமும் பல ஆர்ஜித சேவைகள் நடக்கின்றன. இதை காண விரும்பும் பக்தர்கள், அதை இணையதள முன்பதிவு மூலம் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், திருமலையில் உள்ள விஜயா வங்கியிலும், இந்த டிக்கெட்டுகள் கிடைக்கும். இவ்வாறு, முன்பதிவு செய்த ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை, பல காரணங்களுக்காக பக்தர்கள் ரத்து செய்கின்றனர். அவ்வாறு, ரத்து செய்யப்படும் டிக்கெட்டுகளை, தேவஸ்தானம், திருமலையில் உள்ள மத்திய விசாரணை அலுவலகத்தில், குலுக்கல் முறையில் அளித்து வருகிறது. இதை பெற விரும்பும் பக்தர்கள், ஆர்ஜித சேவைகளின் முன்தினம், தங்கள் பெயர், முகவரி, மொபைல் எண், ஆகியவற்றை குறிப்பிட்டு, பெருவிரல் ரேகை பதிவு மூலம் மத்திய விசாரணை அலுவலகத்தில் உள்ள கவுண்டரில், அளிக்க வேண்டும். பின், காலை, 11:00 மணி முதல், மாலை, 5:00 மணிவரை பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு குலுக்கல் நடத்தப்படும். இதில், தேர்ந்தெடுக்கப்படும் பக்தர்களின் மொபைல் எண்ணிற்கு, குறுந்தகவல் அனுப்பப்படும். பக்தர்கள் அந்த குறுந்தகவலை காட்டி, மத்திய விசாரணை அலுவலக கவுண்டரில், இரவு, 8:00 மணிக்குள், கட்டணத்தை செலுத்தி, டிக்கெட்டை பெற்றுக் கொள்ள வேண்டும். பின், மறுநாள் அன்று, பக்தர்கள் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு, ஒரு மணிநேரம் முன் வைகுண்டம் காத்திருப்பு அறைக்கு செல்ல வேண்டும். இந்நிலையில், நவம்பர் 4ம் தேதி, கைசிக துவாதசியை முன்னிட்டு, அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.