Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீமௌன சுவாமிகள்
ஸ்ரீமௌன சுவாமிகள்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 நவ
2014
06:11

தஞ்சை மாவட்டத்தில் அமைந்திருக்கிற கும்பகோணம் நகரம், கோயில்களுக்கு மட்டும் பெயர் பெற்றதல்ல.... அருள் நிறைந்த மகான்களைத் தன் மடியில் வளர்த்த புனிதமான பூமியும் இதுவே! கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில்தான் சங்கீத மும்மூர்த்திகளான ஸ்ரீதியாகராஜர், சியாமா சாஸ்திரி, முத்துஸ்வாமி தீட்சிதர் போன்றோரின் சஞ்சாரம் நிகழ்ந்துள்ளது. நாம சங்கீர்த்தனத்தின் மகிமையை உலகிறியச் செய்த ஸ்ரீபோதேந்திராள், திருவிசநல்லுர் ஐயாவாள், மருதாநல்லூர் ஸ்வாமிகள் போன்றோர் வசித்ததெல்லாம் கும்பகோணத்துக்கு அருகில்தான். கும்பகோணத்தின் மையத்தில் அமைந்துள்ள ஸ்ரீநாகேஸ்வரன் கோயில் திருப்பணிக்கு சில்லறை சில்லறையாக காசு சேகரித்து, சூடமுழுக்கு செய்வித்தவர்- பாடகச்சேரி ஸ்வாமிகள் வடக்கே எங்கோ பிறந்து, கும்பகோணம் வந்து அற்புதங்கள் நிகழ்த்தி, கொட்டையூரில் சமாதி கொண்டிருப்பவர் ராமாசாது ஸ்வாமிகள். -இப்படி கும்பகோணத்தில் குடிகொண்டிருக்கும் மகான்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்த வரிசையில் - மாபெரும் மகானான மௌன சுவாமிகளுக்கும் கும்பகோணத்தில் ஒரு முக்கிய இடம் உண்டு.  இவரது பிறந்த தேதி தெரியாது.  1899-ல் சித்திரை மாதம் 11-ஆம் தேதி (ஏப்ரல் 22) உத்தர நட்சத்திரத்தன்று சனிக்கிழமை இரவு வேளையில் ஜீவ சமாதி அடைந்தார் மௌன சுவாமிகள்.  கும்பகோணம்-தஞ்சை நெடுஞ்சாலையில் - கும்பேஸ்வரர் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது மௌன சுவாமிகள் மடம்.  கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவு சுவாமிகளின் மடம் அமைந்துள்ள தெரு, அவரது பெயரிலேயே -மௌன சுவாமிகள் மடத் தெரு என்று அழைக்கப்பட்டு வருகிறது.  கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து நகரப்பேருந்துகளில் வந்தால், மௌன சுவாமிகள் பேருந்து நிறுத்தம் என்று சொல்லி, மடம் அருகே இறங்கிக் கொள்ளலாம். மடத்தின் நுழைவாயில் அருகே ஆர்ச் காணப்படுகிறது.  சுவாமிகளின் 113-வது குருபூஜை அண்மையில் அவரது பக்தர்களால் இங்கே சிறப்பாக நடத்தப்பட்டது. கும்பகோணத்தில் சுமார் 25 ஆண்டுகள் வசித்துள்ளார் மௌன சுவாமிகள்.  இவரை சுவாமி விவேகானந்தர், அன்னி பெசன்ட் அம்மையார் போன்றோர் கும்பகோணத்தில் சந்தித்திருக்கிறார்கள்.  காஞ்சி மகா ஸ்வாமிகள் ஒரு முறை கும்பகோணத்துக்கு எழந்தருளியபோது இந்த மடத்திற்கு வந்து மௌன சுவாமிகளை சந்தித்திருக்கிறார். தவிர , மௌன சுவாமிகளின் அருமை பெருமைகளை பற்றிக் கேட்டறிந்த வெள்ளைக்கார துரைமார்கள் பலர் தங்களது நாட்டில் இருந்து புறப்பட்டு வந்து சுவாமிகளின் தரிசனம் பெற்றுத் திரும்பி இருக்கிறார்கள்.  தமிழகத்தின் பற்பல உர்களில் இருந்து எண்ணேற்றோர் வந்து சுவாமிகளைத் தரிசித்து, அவரது அருளாசியுடன் திரும்பி தங்களது ஊர்களில் மௌன சுவாமிகள் மடத்தை நிறுவி இருக்கிறார்கள்.  இப்படிப்பட்ட திருமடங்கள் இன்றைக்கும் ராமநாதபுரம், வாடிப்பட்டி, திருச்சி, மதுரை, சிவகங்கை, பொன்னமரவாதி, குற்றாலம், அருப்புக்கோட்டை, போன்ற பல இடங்களில் அமைந்திருக்கின்றன.  அங்கெல்லாம் தினசரி வழிபாடும் சுவாமிகளின் குருபூஜையும் சிறப்பாக நடந்தேறி வருகின்றன.

ஸ்ரீமவுன சுவாமிகள்  

ஸ்ரீமவுன சுவாமிகளின் ஜீவ சமாதி மேல் ஒரு லிங்கம் ஸதாபிக்கப்பட்டு அதற்குத் தினமும் வழிபாடு நடைபெறுகிறது. அறுபத்துமூன்று நாயன்மார்களின் லீலைகள் அடங்கிய அற்புதமான பழைமையான தாஞ்சாவூர் ஓவியம் ஒன்று இன்றைக்கும் மடத்தில் காணப்படுகிறது.  சுவாமிகள் இந்த திருமடத்துக்கு வந்தபோது இந்த ஓவியத்துக்கும் வழிபாடுகள் நடந்தனவாம்.  தவிர , சுவாமிகள் உட்கார்வதற்குப் பயன்படுத்திய ஈஸிசேர், கால்களை நீட்டி வைத்துக்கொள்வதற்குப் பயன்படுத்திய சிறிய வட்ட வடிவிலான டேபிள் ஆகியவை மடத்தில் பாதுக்கப்பட்டு வருகிறது.
சுவாமிகளுக்கு சிஷ்யராக இருந்த அருணாச்சல சுவாமி, ஆறுமுக சுவாமி மற்றும் காமட்சி அம்மையார் ஆகியோரும் இதே வளாகத்திலேயே சமாதி ஆகி இருக்கிறார்கள், கும்பகோணம் மவுன சுவாமிகள் மகாத்மியம் என்கிற பழம் பெரும் நூலில் இருந்து சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை  அறிய முடிகிறது.  செய்யுளும் பொழிப்புரையுமாக அமைந்துள்ள இந்த நூல், சுவாமிகளிடம் பேரன்பு கொண்டவரும், மடத்துக்கு அருகில் உள்ள நாணயக்காரத் தெருவில் வசித்தவருமான காசுக்கடை அ.சு. சபாபதி செட்டியார் மற்றும் திருச்சி எஸ்.பி.ஜி. கல்லுரியில் தலைமைத் தமிழ்ப் பண்டிதராக இருந்த திருவாளர் அமிர்தம் சுந்தரம் பிள்ளையாலும் கி.பி. 1923-வாக்கில் வெளியிடப்பட்டது.  தவிர, கும்பகோணத்தில் அப்போது இருந்த பல தனவந்தர்கள் இந்த நூலை வெளிக் கொண்டு வருவதில் பெருமளவு உதவி இருக்கிறார்கள்.

சுவாமிகள் கும்பகோணத்துக்கு வந்தது என்று சொல்லப்படுவது - கி.பி. 1875-களில் இருக்கலாம் என்கிறார்கள்.  எந்த ஊர். பெற்றோர் எவர், எங்கெல்லாம் இவர் சுற்றித் திரிந்தார் போன்ற விவரங்கள் ஆதாரபூர்வமாகத் தெரியவில்லை. சிவந்த நிறம் கொண்ட உயர்ந்த திருமேனி; கும்பகோணத்துக்கு இவர் வந்தபோது இருபத்தோரு வயதுடையவர் போல் காணப்பட்டாராம்.  தற்போது மவுன சுவாமிகள் மடம் இருக்கும் இடம் அப்போது 63 நாயன்மார் குருபூஜை மடம் என்று அழைக்கப்பட்டு வந்தது.  இந்தப் பகுதியில் உள்ள சைவ ஆர்வலர்கள் குருபூஜை மடத்துக்கு வந்து தினமும் நாயனமார்களாம்.  மவுன சுவாமிகள் இங்கு வந்து தங்கிய பிறகுதான் இது மவுன சுவாமிகள் மடம் என்கிற பெயரை அடைந்தது. முதன் முதலில், கும்பகோணம் வந்த மவுன சுவாமிகளை அந்த ஊர்மக்கள் கொண்டாடினார்கள்.  தங்கள் ஊருக்கு மாபெரும் ஒரு தவசீலர் வந்துள்ளார் என்று மகிழ்ந்து அவர் இருந்த மடம் நோக்கிச் சென்றார்கள்.  சுவாமிகளின் திருவடி பற்றி நமஸ்கரித்தார்கள்.  தங்களிடம் உள்ள குறைகளைக் கொட்டினார்கள்.  இவரைத் தரிசித்த மாத்திரத்திலேயே தங்களது குறைகள் அகன்று போனது போல் உணர்ந்தார்கள்.  இந்த சந்தோஷத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டார்கள்.  சுவாமிகள் பற்றிய பிரமிப்பூட்டும் செய்திகளும், பெருமையும், பல ஊர்களுக்கும் பரவின. அவரைத் தரிசிக்க வெளியூர்களில் இருந்தும் புகைவண்டி மற்றும் கார்கள் மூலம் பயணித்து வந்து தரிசித்தார்கள். மவுன சுவாமிகள் கும்பகோணத்துக்கு வந்த கதையே சுவாரஸ்யமானது.

கும்பகோணம் வருவதற்கு முன் இவர் திருபுவனத்தில் இருந்து வந்திருக்கிறார்.  கிட்டத்தட்ட சுவாமிகள் முதல் வருகை இந்த ஊரில்தான் அறியப்பட்டது. கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் சுமார் 8 கி.மீ. தொலைவில் வரும் ஊர்-திருபுவனம்.  உடை இல்லை; உணவு இல்லை; பேச்சு இல்லை; எந்நேரமும் மவுனம்தான்.  ஆனால், இவரது நடையில் எந்தத் தடையும் இல்லை. தெருவில் நடந்து கொண்டே இருப்பார். திடீரெனத் திரும்புவார்.  ஒரே இடத்தில் பல மணி நேரம் வரை அசையாமல் நின்று கொண்டிருப்பார்.  தனக்குத் தோன்றிய ஒர் இடத்தில் அமர்ந்து நிஷ்டையில் கூடுவார்.  ஊர்மக்கள் இவரை பித்தன் என்றே சொல்லி வந்தனர்.  அந்த ஊரில் அவரது செயல்பாடுகள் அப்படித்தான் அவரைச் சொல்ல வைத்தன. இவரைக் கண்டாலே ஏதோ பார்க்கக் கூடாத ஆசாமியைப் பார்த்து விட்டோம் என்பது மாதிரி சற்று ஒதுங்கி நடக்க ஆரம்பித்தார்கள்.  ஆனாலும், சுவாமிகளின் கீர்த்தியைப் புரிந்து கொள்ளக் கூடிய ஒர் உள்ளம் அந்த ஊரில் இருந்தது.  அவர், ஒரு சிவ பக்தர். வேளாண் மரபினரான அவர், பொருள் வசதி உள்ளவர்.  உணவில்லாம், ஓய்வில்லாமல் ஒரு மகான் அலைந்து கொண்டிருக்கிறாரே என்று மனம் கசிந்து, சுவாமிகள் பசியாறுவதற்காக அவ்வப்போது அவர் இருக்கும் தேடி வந்து உணவளித்து, நற்பலன் அடைந்திருக்கிறார்.  ஆனாலும் மற்ற பக்தர்கள் இவர் பக்கம் திரும்பவில்லை.

இது கொஞ்ச நாட்களுக்குத்தான்.  ஒரு முறை சுவாமிகளது பார்வை பட்ட ஒருவர், சற்றும் எதிர்பாராமல் பெரும் செல்வத்தை அடையவும்.  ஊர்மக்கள் சுதரித்துக் கொண்டார்கள்.  நாம் நினைப்பது போல் இவர் பித்தன் இல்லை.  பெரிய மகான் என்று தெளிந்து, அவர் உலவிக் கொண்டிருந்த இடத்தை முற்றுகையிட ஆரம்பித்தார்கள்.  பல செல்வந்தர்களும் தங்களது தொழில் பெருக வேண்டும் என்பதற்காக அவரது திருவடி பற்ற ஆரம்பித்தார்கள்.  திருபுவனமே ஆசீர்வதிக்கப்பட்ட பூமி ஆயிற்று. திருபுவனத்தில் ஒரு மகான், அங்குள்ள பல பக்தர்களுக்கு ஆசி புரிந்து வளம் பெருக்கும் தகவல் பக்கத்து ஊரான கும்பகோணத்துக்கும் பரவியது.  இவரை எப்படியாவது நம்மூருக்கு அழைத்து வந்து விட வேண்டும் என்று கூடிப் பேசி, செல்வந்தர்கள் சிலர் திருபுவனம் புறப்பட்டு வந்தார்கள்.  விவரத்தை திருபுவனம் ஊர்காரர்களிடம் சொன்னார்கள்.  இப்படிப்பட்ட மகான் ஒருவர் தங்கள் ஊரை விட்டுச் செல்வதற்கு எவர்தான் ஒப்புக் கொள்வார்கள்?  முதலில், மறுத்து விட்டனர்.  இருந்தாலும், கும்பகோணம்வாசிகள் நைச்சியமாகப் பேசவே, எங்களுக்கு ஒன்றுமில்லை.  சுவாமிகள் மவுனத்தில் இருக்கிறார்.  அவர் உத்தரவு கொடுத்தால் தாராளமாக அழைத்துச் செல்லுங்கள்.  எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை என்றனர்.  மவுன சுவாமிகள் எங்கே பேசப்போகிறார்.  என்கிற அசட்டுத் தைரியம் திருபுவனம்வாசிகளுக்கு, பார்த்தார்கள் கும்பகோணவாசிகள்.  இதற்கு ஒரு தீர்வு கிடைக்கிறவரை திருபுவனத்தை விட்டு நாங்கள் புறப்பட மாட்டோம் என்று அங்கேயே தங்கி விட்டார்கள்.

அன்றைய இரவு அந்த அற்புதம் நிகழ்ந்தது.  திருபுவனம்வாசிகள் அனைவரின் கனவிலும் கயிலைவாசனான சிவபெருமானே தோன்றி, மவுன சுவாமிகளைக் கும்பகோணத்துக்கு அனுப்ப அனைவரும் சம்மதம் தெரிவியுங்கள் என்று அருளினார்.  மறுநாள் பொழுது புலர்ந்ததும் திருபுவனம்வாசிகள் அனைவரும் ஒன்றாகக் கூடி ஒவ்வொருவரும் தங்களுக்கு வந்த கனவில் விஷயத்தைச் சொன்னார்கள்.  கும்பகோணவாசிகள் குதூகலமானார்கள்.  இறை உத்தரவுக்குக் கட்டுப்பட்டு அன்றைய தினமே சுவாமிகளை ஒரு பல்லக்கில் அமர்த்தி , வாத்தியங்கள் முழங்க, திரளான மக்களின் ஊர்வலத்தோடு கும்பகோணத்துக்கு எழுந்தருளினார் மவுன சுவாமிகள்.  அங்குள்ள மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு சுவாமிகளுக்கு உரிய மாரியதை செலுத்தி, தங்கள் ஊரில் அமர்த்திக் கொண்டார்கள் (இந்த பல்லக்கின் ஒரு சிறு பகுதி இன்றைக்கும் மவுன சுவாமிகளின் மடத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது). கும்பகோணத்தில் சுவாமிகள் அமர்ந்த இடம்தான் மேலே சொன்ன 63 நாயன்மார் குருபூஜை மடம் விசாலமான சோலை போன்ற அந்த சூழ்நிலை சுவாமிகளுக்கு ஏகாந்தமாக இருக்குட்டும் என்று சிவபெருமானே திர்மானித்திருந்தார் போலும்.  சுவாமிகளுக்கு ஒவ்வொரு விதத்திலும் உதவியவர்கள், பற்பல வசதிகளைப் பெற்றார்கள்.  அவரைத்தரிசித்த சிறார்கள்.  கல்வியில் மேம்பட்டார்கள். பிணியோடு வந்தவர்கள், அகலப் பெற்றார்கள், சுவாமிகளின் உச்சிஷ்டத்தை (அவர் அருந்தி துப்பிய உணவின் பகுதி) அருந்தியவர்கள், தீரா நோய்கள் தீர்ந்து, பரிபூரண தேகம் பெற்றார்கள்.

உள்ளன்போடு எவர் செய்யும் வழிபாட்டையும் மனமுவந்து ஏற்றுக் கொள்வார் சுவாமிகள்.  அதே நேரத்தில் மனம் ஒப்பாமல் கடனே என்று எவராவது வந்தால் அதைக் கண்டுபிடித்து ஏற்றுக் கொள்ள மறுத்து விடுவார்.  சுவாமிகளுக்கு பாத பூஜை மற்றும் அமுதூட்டல் போன்றவற்றுக்கு வரும் சிலர் இப்படி நடந்து கொள்ள நேரிடும்பேது, அசையாமல் இருந்து தன் எதிர்ப்பைக் காட்டுவார் சுவாமிகள்.  பின், அவர்களே தங்கள் தவறை உணர்ந்து சுவாமிகளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டால், இயல்பு நிலைக்கு வந்து அவர்கள் செய்யும் வழிபாட்டை ஏற்றுக் கொள்வார். சுவாமிகளின் கீர்த்தி பற்றி அறிந்த பல மகான்களும் ரிஷிகளும் கும்பகோணத்துக்குப் படை எடுத்தார்கள்.  இப்படி சுவாமிகளிடம் வந்து அடைக்கலமானவர்தான் அருணாசல சுவாமி என்பவர்.  அந்தணரான இவர், திருவண்ணாமலையில் இருந்து கும்பகோணம் வந்தார்.  மவுன சுவாமிகளே கதி என்று அவரது திருவடிகளிலேயே தன் நாட்களைக் கழித்தார்.  தொண்டு புரிந்து வந்தார்.  மவுன சுவாமிகளைப் பின்பற்றுபவர்கள் அப்போது திகம்பரராகவே இருப்பது வழக்கம்.  அதாவது, மேனியில் எந்த உடையும் இருக்காது.  பிறந்த மேனியுடனேயே எங்கெங்கும் சுற்றித் திரிவர்.  அனைத்தையும் வெறுத்தவருக்கு ஆடை பொருட்டா என்ன?

ஆனால், அப்போது இருந்த வெள்ளைக்கார போலீஸார் சிலர், உடை இல்லாமல் தெருவில் சுற்றித் திரிந்த அருணாசல சுவாமியை, ஆடை இல்லாமல் திரிவது குற்றம் என்று புகார் சொல்லி, தஞ்சை நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றனர்.  குற்றவாளிக் கூண்டுக்கு ஒரு சுவாமிகள் வந்திருப்பது கண்டு நீதிபதி ஆடிப் போனார். காரணம் - கூண்டில் இருக்கும் அருணாச்சல சுவாமி, மவுன சுவாமிகளின் சிஷ்யர் என்பதை அறிவார் நீதிபதி.  நீதிமன்றத்திலேயே, இவரைக் கைது செய்து கூட்டி வந்த போலீஸாரைப் பார்த்துக் கடிந்து கொண்டு, என்ன காரியம் செய்து விட்டீர்கள்..... இவரைப் போன்றவர்கள் எல்லாம் இந்த நாட்டை வாழ்விக்க வந்த மகான்கள்.  நீங்கள் செய்தது நியாயமற்ற காரியம்.  இந்த நாட்டின் கலாசாரத்தையே சீர்குலைக்கும் செயல்.  இப்போதே இந்த சுவாமியிடம் மன்னிப்புக் கேளுங்கள் என்று உத்தரவிட்டார். போலீஸாரும் நீதிபதியின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கி மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர்.  அறிவீனர்களின் அற்பச் செயலைக் கண்டு உள்ளுக்குள் நகைத்த அருணாசல சுவாமி தஞ்சாவூரில் இருந்து புறப்பட்டுத் திருவையாறு வந்து சேர்ந்தார்.  அங்குள்ள காவிரியில் மூழ்கி, அடுத்த கணம் கும்பகோணம் காவிரியில் எழுந்தார் என்றால், இவரது தவ வலிமையை என்னவென்று சொல்வது?

இவரைப்போல் யாழ்பாணத்து சுவாமிகள் (இவர் திருப்புறம்பயத்திலே சமாதி ஆனார்).  மலையாள தேசத்தில் கோட்டாறு பகுதியில் பிறந்த அண்ணாமலை, வாடிப்பட்டி அருகே சல்லாக்குளத்தில் பிறந்த சொக்கையர், ஆறுமுகச் சாமி. காமட்சி அம்மையார் போன்ற பல தவசீலர்கள் சுவாமிகளுக்குத் தொண்டாற்றுவதே தங்கள் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர்கள். இவர்களில் காமட்சி அம்மையாரின் பக்தி, பெரிதும் போற்றதலுக்குரியது. கும்பகோணம் குருநாதப் பிள்ளையின் சகோதரியான காமட்சி அம்மையார்.  மடத்திலேயே பல காலம் தங்கி இருந்து சுவாமிகளுக்கு சேவை செய்து வந்தார்.  சுவாமிகள் விரும்பிக் உண்ணும் உணவு வகைகளையும் பல விதமான பலகாரங்களையும் தயாரித்துக் கொண்டு சுவாமிகளுக்கு கொடுத்து மகிழ்வார்.  அவரது திருமேனிக்கு விசிறி விட்டு சேவை புரிவார். உண்மையான அன்போடு அவரை வணங்கி வந்தார். சுவாமிகளின் மேல் உள்ள பற்றுதல் காரணமாக, அவர் சமாதி அடைந்த ஒரு மண்டலத்துக்குள் (48 நாட்களுக்குள்) காமட்சி அம்மையாரும் மடத்திலேயே சமாதி ஆனார்.  (இவரது சமாதியும் இங்கே உள்ளது). இதைப் பெரும் பாக்கியமாகப் பேசினார்கள் அப்போது.

சுவாமிகளிடம் மிகுந்த பக்தி கொண்டு அவரது திருமடத்திலேயே வாழ்ந்தவர் - வெங்கடாஜலம் என்பவர்.  சித்த வைத்திய நூல்களைக் கற்ற இவர், சுவாமிகளுக்குத் தொண்டு புரிந்து வந்தார்.  ஒரு நாள் மருந்து அரைப்பதற்கு உரிய ஒரு இரும்புப் பொருளை மடத்தின் ஒரு பகுதியில் வைத்து விட்டு வெளியே சென்று விட்டார்.  மறுநாள் இவர் மடத்துக்குத் திரும்பி, மருந்து அரைப்பதற்குரிய அந்த இரும்புப் பொருளைத் தேடினார்.  எங்கும் கிடைக்கவில்லை.  அது மிகுந்த நச்சுத் தன்மை கொண்டது.  வெங்கடாஜலத்தைப் பரபரப்பு தொற்றிக் கொண்டது.  பிறகுதான் அவருக்குத் தெரிய வந்தது -மவுன சுவாமிகள் அதை எடுத்து விழுங்கி விட்டார் என்பது. பதறிப் போனார். இதற்குள் பலருக்கும் விஷயம் தெரிந்தது அனைவரும் மடத்தில் கூடி விட்டார்கள்.

சுவாமிகளை கொல்ல வேண்டும் என்பதற்காக வெங்கடாஜலம் இப்படிச் செய்து விட்டதாகச் சிலர் பேச ஆரம்பித்தனர்.  ஒன்றும் அறியாத அந்த ஜீவன் - மவுன சுவாமிகள் தன் வழக்கப்படி எதுவும் பேசாமல் அமைதியோடு இருந்தது.  அவ்வளவுதான்.... மிகுந்த நஞ்சு நிறைந்த அதை உட்கொண்டதால் சுவாமிகள் சில நிமிடங்களுக்குள் சமாதி அடைந்து விடுவார் என்று முடிவெடுத்து, அடுத்து ஆக வேண்டிய காரியங்களைப் பார்க்க ஆரம்பித்தார்கள் சில அவசரக் குடுக்கைகள் , அவர்களுக்குத் தெரியுமா, சுவாமிகள் சிவபெருமானைப் போன்றவர் என்று.  எத்தகைய நஞ்சும் சுவாமிகளை ஒன்றும் செய்யாது. என்று அப்போது அறியவில்லை . சில நிமிடங்கள் கழித்து , சுவாமி இயல்புநிலைக்கு வந்தபோதுதான் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.  இப்படி எதுவும் பேசாமலே பல விளையாட்டுகள் நடத்தி, வேடிக்கை பார்ப்பார் மவுன சுவாமிகள்.  இத்தகைய பெருமைகள் கொண்ட மவுன சுவாமிகள் மடம் தற்போது வெறும் கீற்றுக் கொட்டகையில் உள்ளது.  சுவாமிகளின் அன்புக்கும் அருளுக்கும் பாத்திரமான அவரது பக்தர்கள், திருப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். ஒரு காலத்தில் கும்பகோணத்துக்கே பெருமை சேர்த்த அந்த மகானின் பெருமைகள் மேலும் பரவ வேண்டும் பலரும் அவரது அருள் பெற வேண்டும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar