அனைத்துலக மக்களின் முன்மாதிரியாக விளங்கக்கூடிய அண்ணல் நபி (ஸல்) அவர்கள். மனித மனங்களை வென்றெடுக்கும் பலபண்புகளைத் தன்னுடைய தோழர்களுக்கு கற்றுத் தந்துஇருக்கின்றார்கள். அவற்றில் ஒரு பண்பு தான், மக்களிடையே ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் வளர்க்கக் கூடிய ஸலாம் கூறும் சொல்லும் பண்பு.ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமைப் பார்க்கும் போது சலாத்தை எடுத்துரையுங்கள் என முஸ்லிம் சமூகத்திற்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். நபிகள்நாயகத்தின் வார்த்தைகளை அடிச்சுவடாய் பின்பற்றிய நபித்தோழர்கள்ஒருவருக்கொருவர் சந்திக்கும் பொழுது ஸலாம் கூறிய பின்பே உரையாடத் துவங்குவார்கள். எல்லா நபித்தோழர்களும் ஸலாம் சொல்வதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துஇருக்கிறார்கள். அவர்களுள் ஒருவர் அப்துல்லாஹ்(ரலி) அவர்கள், இவர் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் இரண்டாம் கலிஃபா உமர் ரலி அவர்களுடைய மகன். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தினந்தோறும் கடைத்தெருவுக்குச் சென்று அங்குள்ள கடைக்காரர்கள், ஏழைகள், பணக்காரர்கள், முஸாஃபிர்கள் என அனைவருக்கும் ஸலாம் சொல்வார்கள். இவர் நாள்தோறும் கடைத் தெருவுக்கு வருவதைப் பற்றி ஒருவர் அப்துல்லாஹ் (ரலி) அவர்களைப் பார்த்து, நீங்கள் கடைத்தெருவிற்கு தினமும் வருகிறீர்கள். ஆனால், எந்தப் பொருளையும் வாங்குவதோ, விலை கேட்பதோ இல்லை. வேறு எதற்காக இங்குவருகிறீர்கள்? என்று கேட்டார்.அதற்கு அப்துல்லாஹ்(ரலி) அவர்கள், நான் அனைவருக்கும் ஸலாம் சொல்வதற்காகத்தான்தினமும் இங்கு வருகிறேன், என்று கூறினார்கள். பார்த்தீர்களா! மிகப்பெரிய கலிஃபாவுடைய மகன், ஸலாம் சொல்வதற்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்று. அதற்கு காரணம் ஸலாம் சொல்வதன் மூலம் அன்பு வளர்கிறது. சகோரத்துவம் மேலோங்குகிறது. உறவுகள் வலுப்பெறுகிறது. அதுமட்டுமல்ல! இறைவன்புறத்திலிருந்து நன்மையும் கிடைக்கிறது. நபிகள் நாயகத்தின் தோழர்கள் எந்தவொரு சிறு நன்மையையும் கூட குறைத்து மதிப்பிட்டதில்லை. அதனால் தான் ஸலாம் சொல்வதற்கு ஒருவருக்கொருவர் முந்தியிருக்கிறார்கள்.நாமும் ஸலாம் சொல்வதற்கு ஒருவருக்கொருவர் முந்திக் கொள்வோமா! — இளம்பிறை இதழிலிருந்து...!