சபரிமலையில் நடை திறந்திருக்கும் நேரம் அதிகரிப்பு: தேவசம்போர்டு முடிவு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19நவ 2014 10:11
சபரிமலை: சபரிமலையில் பக்தர் கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் நடைதிறந்திருக்கும் நேரத்தையும் அதிகரிக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. சபரிமலையில் ’மண்டல கால’ பூஜை நடந்து வருகிறது. கார்த்திகை 1ல் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் சிரமப்பட்டனர். நேற்று இரண்டாவது நாளில் கூட்டம் சற்று குறைந்தது. கூட்டம் அதிகரிக்கும் போது நடை திறந்திருக்கும் நேரத்தை அதிகரிக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. இதன்படி கூட்டம் அதிகமாக இருக்கும் போது காலையிலும், மாலையிலும் 4 மணிக்கு பதிலாக 3 மணிக்கே நடை திறக்கும். இரவில் 11 மணிக்கு பதிலாக 11.45 க்கு நடை அடைக்கப்படும். இதில், போலீஸ் துறையின் வேண்டுகோள் படி தந்திரியுடன் ஆலோசனை நடத்தி தேவசம்போர்டு முடிவெடுக்கும். தற்போது அப்பம், அரவணை பிரசாதம் ஆகியவை பக்தர்களுக்கு தாராளமாக வழங்கப்படுகிறது. நடை திறப்பதற்கு 15 நாட்களுக்கு முன் பிரசாதம் தயாரிக்கும் பணி தொடங்கி விட்டது. தேவையான கையிருப்பு இருப்பதால் பக்தர்கள் கேட்கும் எண்ணிக்கையில் வழங்கப்படுகிறது. 24 மணி நேரமும் பிரசாத வினியோகம் நடக்கிறது.