பதிவு செய்த நாள்
20
நவ
2014
11:11
மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், நான்கு ஆண்டுகளாக தாமதமாகி வருவதால், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தல வரலாறு: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில், 108 வைணவ தலங்களில், 63வது தலமாக விளங்குகிறது. இவ்வூர், ‘திருக்கடல் மல்லை’யாக விளங்கியபோது, புண்டரீக முனிவர், இறைவன் பெருமாளை தரிசிக்க, இத்தலத்தில் தவமிருந்தார். இப்பகுதி நன்னீர் குளத்தில் நீராடி, குளத்து தாமரை மலரை, பாற்கடல் அப்பால் உள்ள இறைவனுக்கு சூட விரும்பி, கடல்நீரை இறைத்து, கடந்து செல்ல முயன்றார். அப்போது, கடற்கரையில் முதியவராக தோன்றிய இறைவன், கடல்நீரை இறைத்தும், தரையில் படுத்து, தாமரை மலரை திருவடியில் சூடியும், முனிவருக்கு காட்சியளித்தார். தரையில் படுத்து காட்சியளித்ததால், ‘ஸ்தலசயன பெருமாள்’ என, பெயர் பெற்றார். இறைவனுக்கு, பல்லவர் காலத்தில், கடற்கரை பகுதியில் அழகிய கற்கோவில் அமைக்கப்பட்டது. அக்கோவில், நாளடைவில் கடல்நீர் சூழ்ந்து பாதிக்கப்படலாம் என கருதி, விஜயநகர பேரரசு காலத்தில், இந்நகரின் மைய பகுதியில், புதிய கோவில் அமைக்கப்பட்டது. இக்கோவிலில், ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள், ராமர், நரசிம்மர், பூதத்தாழ்வார், ஆழ்வார் ஆச்சாரியார்கள், கருடர் மற்றும் ஆஞ்சநேயர் சன்னிதிகள் உள்ளன.
பக்தர்கள் அதிருப்தி: நிலம் தொடர்பான பிரச்னைகள், மகப்பேறு ஆகியவற்றுக்கு, இத்தலம் பரிகார தலமாக விளங்குகிறது. கடந்த 35 ஆண்டுகளுக்கு முன், கோவிலின் பழைய ராஜகோபுரம் அகற்றப்பட்டு, புதிய ராஜகோபுர திருப்பணி துவக்கப்பட்டு, 18 ஆண்டுகளாக அப்பணி நீ டித்து, திருப்பணிக்கு பின், கடந்த 1998ம் ஆண்டு மே 13ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோவில்களில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை என, திருப்பணி செய்து, மகா கும்பாபிஷேகம் நடத்தி, இறைவனுக்கு சக்தியேற்றுவது ஆன்மீக நடைமுறை. இக்கோவிலில், 15 ஆண்டுகளுக்கு முன், மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில், மீண்டும் மகா கும்பாபிஷேகம் நடத்தப்படாமல், கடந்த நான்கு ஆண்டுகளாக தாமதமாகி வரு கிறது. இதனால், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நடவடிக்கை தேவை: பக்தர்கள் கூறுகையில், ‘இறைவன் அருட்சக்திக்காக, கும்பாபிஷேகம் நடத்த வேண்டியது அவசியம். அதை தாமதப் படுத்தினால், இவ்வூருக்கே பாதகம். இனியும் தாமதிக்காமல், கும்பாபிஷேகம் நடத்த, அறநிலைய துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். இதுகுறித்து, கோவில் தரப்பினர் கூறுகையில், ‘ராஜ கோபுரம் உட்பட கோவிலுக்கு திருப்பணி செய்ய, 50 லட்சம் ரூபாய்க்கும் மேல் செலவாகும். நன்கொடையாளர்கள் மூலமே செய்ய இயலும் என்பதால், முயற்சித்து வருகிறோம். திருப்பணிக்கு பிறகே, கும்பாபிஷேகம் குறித்து முடிவெடுக்க ப்படும்’ என்றனர்.