சபரிமலை: சபரிமலையில் தொடர் மழையால் தங்குவதற்கு இடம் இன்றி பக்தர்கள் குளிரில் தவிக்கின்றனர். இங்கு நேற்று முன்தினம் மாலையில் பெய்ய தொடங்கிய மழை இரவில் வலுத்தது. காற்றும் சேர்ந்து கொண்டதால் கடும் குளிரில் பக்தர்கள் பரிதவித்தனர். விடிய விடிய பெய்த மழை நேற்று அதிகாலையிலும் தொடர்ந்தது. நேற்றும் பகல் முழுவதும் சாரல்மழையும், காற்றும் அடித்ததால் தங்குவதற்கு இடம் இன்றி பக்தர்கள் அவதிப்பட்டனர். நேற்று பிற்பகல் 12 மணிக்கு பின், சன்னிதானம் வந்த பக்தர்கள், இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறந்து நெய் அபிஷேகம் முடிந்துதான் புறப்பட முடியும். இங்கு பக்தர்கள் தங்க அறைகள் போதிய எண்ணிக்கையில் இல்லை. இதனால் கட்டடங்களின் ஓரங்களிலும், தேவசம்போர்டின் இலவச ’ஷெட்’களிலும் தங்கியுள்ளனர். மழையால் சபரிமலை வரும் பாதையும், சுற்றுப்புறங்களும் சேறும், சகதியுமாக உள்ளது.