பதிவு செய்த நாள்
22
நவ
2014
10:11
குறிச்சி: குறிச்சி அரவான் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று, அரவான் திருவீதி உலா நடந்தது.குறிச்சி சுற்றுப் பகுதிகளில் வசிக்கும் அனைத்து சமுதாயத்தினருக்கும் பொதுவான அரவான் திருவிழா, கடந்த 11ம் தேதி, முதுப்பார் கோவிலில் பூஜை முடித்து, ஊர் எல்லை கட்டுதல் மற்றும் கம்பம் நட்டுபூச்சாட்டுதலுடன் துவங்கியது. 18ம் தேதி, பெருமாள் கோவிலில் அரவான், அனுமார் சுவாமிகள் கட்டுதல் நடந்தது. 19ம் தேதி, அரவான் எழுந்தருளுதல், குளக்கரை வினாயகர் கோவிலில் தீர்த்தமாடி சிறப்பு வழிபாட்டுடன் புறப்பட்டு, அரவான் கோவிலை சென்றடைந்தது. அங்கு, பொங்கியம்மனுடன் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை 9.00 மணிக்கு குளக்கரை கற்பக வினாயகர் கோவிலில், அரவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இவை அனைத்தும், அரவானுக்கு தங்கம் மற்றும் வெள்ளி முக அமைப்பின்போது, நடந்தன. தொடர்ந்து நேற்று மண் முகம் அமைக்கப்பட்டு, திருவீதி உலா துவங்கியது. ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் உரிய மேடைகளில் அரவான் வைக்கப்பட்டு, வழிபாடு நடந்தது. மாலை 5.00 மணியளவில், சுந்தராபுரம், நான்கு ரோடு சந்திப்பிலுள்ள திடலை வந்தடைந்த அரவான் மற்றும் பொங்கியம்மாளை மக்கள் தரிசித்து, வழிபட்டு சென்றனர். தொடர்ந்து, கள மேடைக்கு செல்லும் அரவானுக்கு, பெருமாள் கோவில் அருகே, கிருஷ்ணர் மாலை அணிவித்து வழியனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. விழா முன்னிட்டு, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.