பதிவு செய்த நாள்
22
நவ
2014
11:11
பவானி: பவானி, தேவபுரம் பகுதியில் உள்ள, ஐயப்பன் கோவிலில், எட்டாம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. முக்கூடல் என புண்ணிய நதிகளான காவிரி, பவானி, அமிர்தவாஹினி நதிகள் சங்கமிக்கும், பவானி நகரத்தில் அவதார புருஷர்களான ஸ்ரீதர்மசாஸ்தா, ஸ்ரீஐயப்பன் கோவில் சேர, சோழ, பாண்டிய கட்டிடக்கலை பாணியில் தேர்ந்த சிற்பிகளை கொண்டு நிர்மாணிக்கப்பட்டது. கடந்த, 2007ல் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வருஷாபிஷேக விழா நடந்து வருகிறது. நேற்று எட்டாம் ஆண்டு வருஷாபிஷேக விழா, காலை, 7.30 மணிக்கு மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. பின், நவகிரக ஹோமம், மஹா சுதர்சன ஹோமம், ஸ்ரீசாஸ்தா ருத்ர ஹோமம் மற்றும் கோவிலின் மூலவர்களான ஸ்ரீதர்ம சாஸ்தா, ஸ்ரீஐயப்பன் சுவாமிகளுக்கு, பல்வேறு வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. மாலை, 6.30 மணிக்கு விசேஷ அலங்காரத்துடன், ஸ்ரீதர்ம சாஸ்தா, ஸ்ரீஐயப்பன் சுவாமிகளுக்கு மஹா தீப தூப ஆராதனை நடந்தது. ஸ்ரீஐயப்பன் கோவில் குருசாமி ஜெயராமன், பாலு, மணிமாறன் ஆகியோர், ஏற்பாடுகளை செய்திருந்தனர். அ.தி.மு.க., நகர செயலாளர் கிருஷ்ணராஜ், அக்னி ராஜா மற்றும் ஐயப்ப பக்தர்கள் பங்கேற்றனர்.