சபரிமலை வரும் பக்தர்களுக்கான விபத்து நிவாரண இழப்பீடு அதிகரிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22நவ 2014 12:11
சபரிமலை: சபரிமலை வரும் பக்தர்களுக்கான விபத்து நிவாரண இன்ஷூரன்ஸ் தொகையை அதிகரித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கான ஏரியாவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சபரிமலை வரும் பக்தர்களுக்காக திருவிதாங்கூர் தேவசம்போர்டு, நேஷணல் இன்ஷூரன்ஸ் கம்பெனியுடன் இணைந்து, இன்ஷூரன்ஸ் திட்டத்தை கடந்த சில ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு இன்ஷூரன்ஸ் தொகையை அதிகரிக்கவும், ஏராயாவை கூட்டவும் போர்டு மற்றும் இன்ஷூரன்ஸ் அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதன்படி கடந்த ஆண்டு வரை விபத்து மரணம் ஏற்பட்டால் வழங்கப்பட்டு வந்த இரண்டு லட்சம் ரூபாய், இந்த ஆண்டு 2.25 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்ஷூரன்ஸ் பாலிசியின் கவரேஜ் ஏரியா 50 கி.மீ. தூரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. பஸ் ரூட்டில் பந்தளம் மற்றும் ஏற்றுமானூர் முதல் பம்பை வரை யும், ரயில்வே ரூட்டில் திருவல்லா, செங்கன்னூர், கோட்டயம், சங்கனாசேரி முதல் பம்பை வரையும் என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இறந்தவர்கள் உடல் கொண்டு செல்ல கேரளாவிற்கு உட்படகுதியில் 30 ஆயிரம் ரூபாயும், வெளிமாநிலத்துக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். இதற்காக தேவசம்போர்டு 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு பாலிசி எடுத்துள்ளது.