பதிவு செய்த நாள்
24
நவ
2014
11:11
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு, நேற்று, ரத்தின அங்கி சேவை உற்சவம் நடந்தது.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு, ஆண்டுக்கு இரண்டு முறை, ரத்தின அங்கி சேவை நடப்பது வழக்கம். கார்த்திகை அனுஷ நட்சத்திரத்திலும், வைகுண்ட ஏகாதசி அன்றும், பெருமாள் ரத்தின அங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதன்படி, நேற்று காலை, 10:30 மணியளவில், கண்ணாடி அறையில் அலங்காரம் முடித்து, தாததேசிகன் சன்னிதி எதிரே பெருமாள் எழுந்தருளினார். ரத்தின அங்கி அலங்காரத்தில் பெருமாளும், கல் பதித்த கிரீடம் அணிந்து பெருந்தேவி தாயாரும் அருள்பாலித்தனர். இதை தொடர்ந்து, பிற்பகல், 12:30 மணியளவில், திருமஞ்சனம் நடந்தது. மாலை, 5:30 மணியளவில் பெருமாள், பெருந்தேவி தாயார், உபய நாச்சியார் ஆகியோர், கோவில் உட்பிரகாரத்தில் சுற்றி வந்து, இரவு, 7:00 மணியளவில், தேசிகன் சன்னிதிக்கு வந்தடைந்தனர். இதை தொடர்ந்து, வேத பிரபந்தம் சாற்றுமுறை தீர்த்தம், சடாரி ஆகியவை நடந்தன. இரவு, 11:00 மணியளவில் பெருமாள், தாயார் அவரவர் சன்னிதிக்கு சென்றனர். வழக்கமாக மலர் அலங்காரத்தில் காணும் பெருமாள், நேற்று ரத்தின அங்கி சேவையில் எழுந்தருளியதை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.