பதிவு செய்த நாள்
24
நவ
2014
11:11
புட்டபர்த்தி: பகவான் சத்ய சாய் பாபாவின் 89வது பிறந்த நாள் விழா, புட்டபர்த்தியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புட்டபர்த்தி, பிரசாந்தி நிலையத்தில், சத்ய சாய் பாபா மகா சமாதி முன்பாக ஏராளமான பக்தர்கள் கூடினர். சத்ய சாய் பள்ளி மாணவர்களின் வழிபாடு, அனந்தப்பூர் மற்றும் பிரசாந்தி நிலையம் பாண்டு வாத்திய முழக்கங்களுடன் விழா துவங்கியது. இசை வழிபாட்டின் நிறைவில் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து பாடலைப் பாடினர். நிறைவாக கர்நாடக இசை பாடல்களும் பக்தி பாடல்களும் பாடப்பட்டன. நிகழ்வுக்கு வந்திருந்தவர்களை வரவேற்று, ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனத்தின் அகில இந்தியத் தலைவரும் சாய் அறக்கட்டளை உறுப்பினருமான வி.ஸ்ரீநிவாசன் பேசுகையில், ஸ்ரீ சத்ய சாய் குடிநீர்த் திட்டம் குறித்து விளக்கினார். கோத்தசெருவு, புக்கபட்டணம், புட்டபர்த்தி ஆகிய 3 மண்டலங்களில் உள்ள 128 குக்கிராமங்களுக்கான, குடிநீர்த் திட்டத்தின் 2வது கட்டம் இது. இதன் மூலம் இரண்டரை லட்சம் பேர் பயன் பெறுவர். இந்த குடிநீர்த் திட்டத்தை ஆந்திர துணை முதல்வரும் உள்துறை அமைச்சருமான என்.சின்ன ராஜப்பா துவக்கி வைத்து, மக்களுக்கு அர்ப்பணித்தார். இந்த திட்டத்தை வெற்றிகரமாக செய்து முடித்த எல் அண்ட் டி நிறுவன அதிகாரிகள் கவுரவிக்கப்பட்டனர். அறக்கட்டைள உறுப்பினர்களான ஆர்.சக்ரவர்த்தி, ஆர்.ஜெ.ரத்னாகர் ஆகியோர் இந்த குடிநீர்த்திட்டத்தை முறைப்படி ஆந்திர அரசிடம் ஒப்படைத்தனர். அதை ஏற்றுக் கொண்டு பேசிய அமைச்சர், குடிநீர் தேவைப்படும் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் அறக்கட்டளை காட்டும் ஆர்வத்தைப் பாராட்டினார். புட்டபர்த்தி, ஆன்மிக சுற்றுலா தலமாக மாறி வருவதாகவும் குறிப்பிட்டார்.