பதிவு செய்த நாள்
24
நவ
2014
11:11
மேல்மருவத்துார்: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் அமாவாசை வேள்வி பூஜையை, பங்காரு அடிகளார் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆதிபராசக்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஒவ்வொரு மாதமும், அமாவாசை நாட்களில், வேள்வி பூஜை நடைபெறுகிறது.நேற்று முன்தினம், அமாவாசையையொட்டி, ஆதிபராசக்தி அம்மனுக்கு, அதிகாலை, 4:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோவில் வளாகத்தில், ஓம் சக்தி பீடம் அருகில், சதுர வடிவில் பெரிய யாக குண்டம் மற்றும் 54 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன.மாலை, 4:00 மணிக்கு, பெரிய யாக குண்டத்தில், வேள்வி பூஜையை பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, கல்லுாரி வளாகத்திலிருந்து 3 கி.மீ., துாரம் வரை, பக்தர்கள் வரிசையாக வந்து, சமத்து குச்சி, நவதானியம் ஆகியவற்றை யாக குண்டத்தில் போட்டு அம்மனை வணங்கினர்.ஆன்மிக இயக்க துணை தலைவர் செந்தில்குமார், பக்தர்களுக்கு, பிரசாதம் வழங்கினார். அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். மாலை, 6:00 மணியிலிருந்து இரவு 11:00 மணிவரை, அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை, கோயம்புத்துார் சக்தி பீடத்தினர் செய்திருந்தனர். மதுராந்தகம் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.