பதிவு செய்த நாள்
24
நவ
2014
11:11
திருப்போரூர்: திருப்போரூர் காட்டூர், உத்திரவைத்தியலிங்கேஸ்வரர் கோவிலில், ராஜகோபுரம் மற்றும் கும்பாபிஷேக திருப்பணிகள் விரைந்து முடிவடைய, நேற்று நாள் முழுவதும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.திருப்போரூர் அடுத்த காட்டூரில், பல்லவர் காலத்தை சேர்ந்த, தையல்நாயகி சமேத உத்திரவைத்தியலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. அங்கு, ராஜகோபுரம் கட்டுமான பணி மற்றும் திருப்பணிகள், கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகின்றன. பணிகள் விரைந்து நடைபெற, சென்னை கே.கே. நகர் கிருஷ்ணகிருபா ஸத்சங்கத்தை சேர்ந்த நுாறு மகளிர் நேற்று காலை 8.00 மணி முதல், சிறப்பு பாராயண வழிபாடுகளை நிகழ்த்தினர். விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம், தேவி மகாத்மியம், சவுந்தர்ய லகரி, சிவானந்த லகரி, கனகதாரா ஸ்தோத்ரம், சிவசகஸ்ரநாமம் ஆகியவை முழுவதும் ஓதப்பட்டன. வரும், டிச., 5ம் தேதி, திருக்கார்த்திகையை முன்னிட்டு கோவிலில், 5000 தீபங்கள் ஏற்றும் சிறப்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது.