பதிவு செய்த நாள்
24
நவ
2014
11:11
திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புதிய விக்ரகங்களுக்கு புஷ்பாதி வாசம் மற்றும் 106 திவ்யதேச திருமண் சமர்ப்பிக்கும் விழா, நேற்று நடந்தது.திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், வரும் 1ம் தேதி நடக்கிறது; யாக சாலை பூஜை, வரும் 28ல் துவங்குகிறது. கோவில் வளாகத்தில் புதிதாக சக்கரத்தாழ்வார், ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீஹயக்கிரீவர், ஸ்ரீதன்வந்திரி பெருமாள் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.இங்கு பிரதிஷ்டை செய்வதற்காக, சுவாமி விக்ரகங்கள் மற்றும் ஆழ்வார்களின் சிலைகள் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு ஆகம விதிப்படி ஜலாதி வாசம், தான்ய வாசம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, நேற்று காலை 10.00 மணிக்கு, புஷ்பாதி வாசம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின், மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பல்வேறு வகையான மலர்களை, பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று, தொட்டிகளுக்குள் இருந்த விக்ரகங்கள் மீது தூவினர்.திருமண் சமர்ப்பிப்பு: கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 108 திவ்ய தேசங்களில், நில உலகில் காண முடியாத திருப்பரமபதம், திருப்பாற்கடல் தவிர, 106 திவ்ய தேசங்களில் இருந்து திருமண், தீர்த்தம் மற்றும் திருதுளா ஆகியவை பக்தர்களால் எடுத்து வரப்பட்டு, கோவில் வளாகத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வந்தன. அவை, கோவிலில் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கொடிமரம் முன் அமைக்கப்பட்டிருந்த தொட்டியில், திருமண்ணை பக்தர்கள் இட்டு வழிபட்டனர்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.