பதிவு செய்த நாள்
25
நவ
2014
11:11
திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, யாக சாலை பூஜை வரும் 28ல் துவங்குகிறது. அன்று மாலை 5.00 மணிக்கு, விஸ்வக்ஷேன ஆராதனத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன. தொடர்ந்து ஆச்சர்யவர்ணம், புண்யாகவாசனம், வேதங்கள், திவ்ய பிரபந்தர பாராயணங்கள், வாஸ்து சாந்தி நடைபெறும். மறுநாள், 29ம் தேதி காலை 7.30 மணிக்கு ரக்ஷா பந்தனம், கலாவாஹனம், யாகசாலை பிரவேசம், கும்ப மண்டல, பிம்ப அக்னியாதி சதுஸ்தான பூஜைகள் நடக்கின்றன. மதியம் 12.00 மணிக்கு, பூர்ணாஹூதி, சாற்று மறை கோஷ்டி; மாலை 5.30 மணிக்கு விமானங்கள் சுத்தி, திருமஞ்சனம், புதிய விக்ரகங்களுக்கு ஜலாதிவாசம், மூலவர்களுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. இரவு 7.00 மணிக்கு கும்ப, மண்டல, பிம்ப அக்னியாதி சதுஸ்தான பூஜை, இரவு 9.00 மணிக்கு பூர்ணாஹூதி, சாற்று மறை கோஷ்டி நடக்கிறது.வரும் 30ம் தேதி காலை 7.00 மணிக்கு புதிய விமானங்கள், எம்பெருமான்களுக்கு மாநோன்மான சாந்தி ஹோமம், பீட ஸ்தாபனம்; மாலை 5.00 மணிக்கு உற்சவமூர்த்தி 108 கலச மகா அபிஷேகம், ரக்ஷா பந்தனம்; இரவு 7.00 மணிக்கு கும்ப, மண்டல பிம்ப அக்னியாதி சதுஸ்தான பூஜை, தத்வந்யாஸ யாக பூஜை நடைபெறும்.
டிச., 1ம் தேதி காலை 7.00 மணிக்கு சதுஸ்தான பூஜை, சாந்தி ஹோமம்; காலை 8.30 மணிக்கு மகா பூர்ணாஹூதி, தச தானங்கள், 16 தானங்கள்; 9.00 மணிக்கு எம்பெருமான்கள் புறப்பாடு; 9.47க்கு விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம்; 10.22க்கு மூலவர்களுக்கு ப்ராணப்ரதிஷ்டை; 10.30 மணிக்கு மகா தீபாராதனை, தச தரிசனம். பகல் 12.00 மணிக்கு நைவேத்தியம், தீபாராதனை, ஆசீர்வாதம், அன்னதானம் நடக்கிறது. இரவு 7.00 மணிக்கு, எம்பெருமான் கருட சேவை புறப்பாடு நடைபெறும்.யாக சாலை பூஜைக்கு 36 குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ராமன் பட்டர் தலைமையில் 72 பட்டாச்சாரியார்கள், யாகசாலை பூஜை செய்வர். ரிக், யஜூர், சாம, அதர்வன வேதங்கள் மற்றும் தமிழ் மறைகளில் பாராயணம் நடைபெறும்.
கேமரா பொறுத்த கமிஷனர் அறிவுரை : கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக, மாநகர போலீஸ் கமிஷனர் சேஷசாய், துணை கமிஷனர் திருநாவுக்கரசு ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். பக்தர்கள் வரும் வழித்தடங்கள், அன்னதானம் நடக்கும் இடங்கள், கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படும் வழி, வெளியேறும் வழியை கேட்டறிந்தனர். உள்பிரகாரம், வெளிபிரகாரம், தேரோடும் நான்கு வீதிகளில் செய்துள்ள ஏற்பாடு குறித்து திருப்பணிக்குழுவினர் விளக்கினர்.மூன்றாவது கண் திட்டத்தில், கண்காணிப்பு கேமரா பொருத்தி வரும் ஸ்ரீபுரம் அறக்கட்டளை மூலம், அரிசி கடை வீதி, காமராஜர் ரோடு, பூ மார்க்கெட் ரோடு, அன்னதானம் நடக்கும் கஜலட்சுமி தியேட்டர் ரோடு மற்றும் கோவிலுக்குள் பக்தர்கள் நுழையும் வழித்தடம், மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகள், வெளியேறும் பகுதிகளில் 20 கேமராக்கள் பொருத்த கமிஷனர் அறிவுறுத்தினார்.
புதிய உற்சவர் சிலை : கோவில் வளாகத்தில் புதிதாக லட்சுமி நரசிம்மர், சக்கரத்தாழ்வார் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, ஐம்பொன்னால் லட்சுமி நரசிம்மர் மற்றும் சக்கரத்தாழ்வார் உற்சவர் சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் 45 கிலோ எடை கொண்டவை.மூலவர், ராஜகோபுரம், சொர்க்கவாசல் கோபுரம், தெற்குவாசல் கோபுரம், புதிதாக அமைந்துள்ள நான்கு சன்னதிகளின் கோபுரங்கள், உற்சவர் சன்னதி கோபுரம் உள்ளிட்டவற்றுக்கு, தங்க முலாம் பூசப்பட்ட, 106 புதிய கலசங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. வரும் 27ல் நடக்கும் முளைப்பாலிகை மற்றும் தீர்த்தக்குட ஊர்வலத்தின்போது, உற்சவர் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு, கோவிலுக்கு எடுத்து வரப்பட உள்ளன.