பதிவு செய்த நாள்
27
நவ
2014
12:11
திருவண்ணாமலை:திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீப திருவிழாவில், 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அனைத்துத்துறை அதிகாரிகளுடன், தீப திருவிழா ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆய்வு நடத்தினார். கலெக்டர் ஞானசேகரன், எஸ்.பி., முத்தரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ஆய்வு கூட்டத்தில், அந்தந்த துறைகளின் சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து கூறப்பட்டது. இதில், கோவில் நிர்வாகத்தின் சார்பில் கோவில் முழுவதும் கூடுதல் மின்விளக்கு, கோவில் வளாகத்தை சுத்தமாக வைக்க பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது குறித்து தெரிவிக்கப்பட்டது.
தீப திருவிழாவை கோவில் வளாகத்தில் நேரடியாக ஒளிபரப்பி, பக்தர்கள் காண்பதற்கு வசதியாக, ஆறு அகண்ட திரை அமைத்தல், கோவிலினுள் நான்கு கோபுரம் உள்பட, 35 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துதல், கிரிவலம் வரும் பக்தர்கள் இறை சிந்தனையுடன் வலம் வர மொத்தம், 150 இடங்களில் ஸ்பீக்கர் செட் ஒளிபரப்ப நடவடிக்கை போன்ற பணிகள் செய்யப்பட்டுள்ளன என, தெரிவிக்கப்பட்டது.போலீஸார் சார்பில், பாதுகாப்பு பணியில், ஐந்து எஸ்.பி., 12 ஏ.எஸ்.பி., 75 டி.எஸ்.பி., மற்றும், 200 இன்ஸ்பெக்டர் உள்பட, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், பக்தர்களின் வசதிக்காக, 34 உதவி மையம் அமைக்கப்பட உள்ளது என, தெரிவிக்கப்பட்டது.நகராட்சி சார்பில், 15 இடங்களில், 20 தற்காலிக கழிவறைகள், 12 இடங்களில் மருத்துவ முகாம், மூன்று நடமாடும் மருத்துவ குழுக்கள், 108 ஆம்புலன்ஸ் ஐந்து வண்டிகள் அவசர காலத்தில் சிகிச்சைக்காக பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறை சார்பில், 1,972 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. தீப திருவிழாவினை முன்னிட்டு, எட்டு ரெகுலர் ரயில் உள்பட, 35 ரயில்கள் இயக்கப்பட உள்ளது. ஒன்பது இடங்களில் தற்காலிக பஸ்ஸ்டாண்ட், 40 இடங்களில் கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. தீப திருவிழா முடியும் வரை, கிரிவலப்பாதை மற்றும் நகர் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.